“நம் வெற்றி நமக்கானது அல்ல, சமூகத்துக்கானது என்றும், அதிகாரத்துக்கு வந்த உடன் அதிகார வர்க்கத்தில் உள்ளோம் என்று எண்ணக் கூடாது” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாகப் பேசி உள்ளார்.

இந்தியக் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குச் சென்னை அண்ணா மேலாண்மை நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், 2020-2021 ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணி தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 36 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், அவர்களில் 26 பேர் நிகழ்வில் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

இந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்திய ஆட்சிப் பணி என்பது எண்ணற்ற இளைஞர்களின் கனவாக உள்ளது” என்று, குறிப்பிட்டார். 

“மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன் மாதிரியாக எளிய குடும்பங்களில் இருந்து வரும் இளைஞர்களுக்கு சுட்டு விரலாக அமையும் வகையில், தமிழ்நாடு அரசால் அண்ணா மேலாண்மை நிலையம் நடத்தப்பட்டு வருகிறது என்றும், இட ஒதுக்கீடு முறையில் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் இங்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது” என்றும், கூறினார்.

அத்துடன், “அரசின் திட்டங்கள், சட்டங்களை ஏழை மற்றும் எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் மிகப் பெரிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்றும்” குடிமைப் பணி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். 

மேலும், “இது நுழைவு வாயில் தான் என்றும், இது மாளிகை அல்ல, இனி தான் நீங்கள் அதிகம் உழைக்க வேண்டும்” என்றும், முதலமைச்சர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, “நம் வெற்றி நமக்கானது அல்ல, அது சமூகத்துக்கானது” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தோடு பேசினார்.

முக்கியமாக, “அதிகாரத்துக்கு வந்த உடன் அதிகார வர்க்கத்தில் உள்ளோம் என்று நாம் எண்ணக் கூடாது” என்று குறிப்பிட்டுப் பேசிய முதலமைச்சர், “நேர்மையாக பணியாற்ற வேண்டும், சிலர் தவறான வழிக்குத் தூண்டினாலும் சபலத்துக்கு உட்படக் கூடாது” என்றும், அனைவரையும் கேட்டுக்கொண்டார். 

அதே போல், “எதிர் வரும் பிரச்சினையைக் கண்டு ஓடாமல், அதைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும், பணியின் போது மக்களை நேசிப்பது முக்கியம்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்திக் கூறினார்.