சமத்துவ நாயகர் என போற்றக்கூடிய வகையில் முதல்வர் செயல்படுகிறார் என்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மு.க.ஸ்டாலினை புகழ்ந்தார்.

ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாள் என அறிவித்த முதல்வரை சென்னை தலைமைச்செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேரும் சந்தித்து நன்றியை தெரிவித்தனர். 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது: முதல்வர் முக ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என அறிவித்திருக்கிறார் மேலும் புரட்சியாளர் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை செம்மைப் பதிப்பு எனும் பெயரில் நல்ல தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என்று அறிவித்தார் முதல்வர்.

மேலும்  அம்பேத்கர் மணிமண்டபம் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருக்கிறது அதனை மறு சீரமைத்து அங்கே அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை அமைக்க வேண்டும், புத்தர் சிலை அமைக்க வேண்டும், அங்குள்ள நூலகங்களை சீரமைத்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை வைத்திருந்தோம், அதனடிப்படையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

அதனைத்தொடர்ந்து அரசால் நடத்தப்படும் சமபந்தி போஜனம் என்பதை சமத்துவ விருந்து என மாற்றி அமைக்க வேண்டும் என்ற விடுதலை சிறுத்தைகளின் கோரிக்கையை ஏற்று இனி சமத்துவ விருந்தாக அரசால் நடத்தப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என திருமாவளவன் தெரிவித்தார். மேலும் சமத்துவ நாயகராக இருந்து இந்த அரசை சமூகநீதி அரசாக நடத்தி செல்லும் முதலமைச்சருக்கு விடுதலை சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம் ன்று தெரிவித்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் துணை முதல்வராக இருந்த பொழுதே பாப்பாபட்டி கீரிப்பட்டி நாட்டார்மங்கலம் கொட்டகாட்சி ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தாமல் கிடப்பில் போட்டு இருந்ததை கவனத்தில் கொண்டு அங்கிருந்த எதிர்ப்புகளை எல்லாம் சரிசெய்து அந்த நான்கு ஊராட்சிகளுக்கு தேர்தலை நடத்தினார் தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஐ நாற்காலியில் அமர வைத்த பெருமை முதல்வர் முக ஸ்டாலினை சேரும், அதனை வரவேற்று பாராட்டும் வகையில் அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரை சமத்துவப் பெரியார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாராட்டினோம்.

மேலும் சமத்துவ நாயகர் என்று போற்றக் கூடிய வகையில் முதல்வர் இந்த அறிவிப்புகளை செய்து வருகிறார். கோடான கோடி பூர்வகுடி உள்ளங்களில் மகிழ்ச்சியை நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை பிரதிபலிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு முதல்வரை சந்தித்து நன்றியை தெரிவித்தோம் என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.