“காலநிலை மாற்றத்தால் மதுரை பாதிக்கப்படுவது குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் கால நிலை மாற்றத்தால், பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அந்த வகையில், புதிதாக நிகழும் கால நிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டம் மதுரை மாவட்டம் பற்றிய தகலை இந்திய வானிலை துறை தனது ஆய்வறிக்கையின் மூலமாகத் தகவல் வெளியிட்டு இருந்தது.

இதனையடுத்து, இந்திய வானிலை துறையின் ஆய்வில் கால நிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மதுரை மாவட்டம் பற்றிய தகவலை, தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ள, மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளார்.

அதன் படி, “காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமாக மதுரை இருக்கிறது” என, இந்திய வானிலைத் துறையின் ஆய்வறிக்கை இணைத்து அது பற்றிய தகவல்களை விவரித்து உள்ளார்.

பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அந்த கடிதத்தில், “காலநிலை பேரழிவால் வரக்கூடிய 10 ஆண்டுகள் மானுடத்திற்கான இருத்தியலை உறுதி செய்வதற்கான தசாப்பதமாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் தெரிவித்துள்ளபடி, மானுட வரலாற்றின் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த காலமாக இந்த காலம் இருக்கிறது” என்று, அவர் குறிப்பிட்டு உள்ளார்.

“மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வானிலை துறையின் Observed Rainfall Variability and Changes over Tamil Nadu State என்கிற ஆய்வு அறிக்கை வெளிவந்து உள்ளது என்றும், இந்த ஆய்வறிக்கையின் படி தமிழகத்தில் உள்ள மாவட்டங்களிலேயே காலநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படப் போகிற மாவட்டமாக மதுரை இருப்பது தெரிய வருகிறது” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அத்துடன், “மதுரை மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழை பொழிவு கடுமையாக குறைய ஆரம்பித்து உள்ளது என்றும், தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் மதுரை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பெய்கின்ற மழையின் அளவு குறைந்து வருவதாக, இந்த அறிக்கை கூறுகிறது” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

“இதில் வருட சராசரி மழை பொழிவு குறிப்பிடத்தக்க அளவு குறைகின்ற தமிழகத்தின் ஒரே மாவட்டம் மதுரையே என்றும், ஒவ்வொரு மாதமும் பெய்கின்ற மழையின் அளவை கணக்கில் கொண்டு, எல்லா மாதமும் சராசரி மழை பொழிவு குறைந்து வரக்கூடிய மாவட்டமாக மதுரையைச் சொல்கிறது புவி அறிவியல் துறையின் ஆய்வு” என்றும், அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

“இவற்றுடன், வறண்ட நாட்களின் எண்ணிக்கையும் மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கிறது என்றும், இவற்றைக் கணக்கில் கொண்டு, நிகழவிருக்கும் ஆபத்தினை தடுக்க கீழ்கண்ட முன்னெடுப்புகளைச் செய்வது அவசியமாகிறது” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

அதன் படி,

- மதுரை மாவட்டத்தின் பசுமை போர்வையை 33 சதவீதமாக அதிகரிக்க சிறப்புத் திட்டங்கள் அறிவிக்க வேண்டும். 

- ஏற்கெனவே உள்ள காடுகளை வேறு எந்த பயன்பாட்டிற்கும் மாற்றம் செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.

- அக்காடுகளைப் பாதுகாக்க சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

- மதுரை மாவட்டத்தில் உள்ள எல்லா நீர் நிலைகளையும் போர்க்கால அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்து அவற்றை முழுக் கொள்ளளவிற்குத் தூர்வார வேண்டும்.

- வைகையின் பிறப்பிடமான மேற்கு மலைகளைப் பாதுகாக்கத் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். 

- வைகை நதியை 5 மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டுப் பகுதியாக இல்லாமல் ஒற்றை  நிர்வாக அலகின் கீழ் கொண்டுவர வேண்டும்.

- மதுரை மாவட்டம் தமிழகத்தின் கலாச்சார தலைநகரம், அதன் சூழலை மீட்டுருவாக்கம் செய்வதற்கும், காற்று மாசை குறைப்பதற்கும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

என்று, தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்றும்,முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.