சாத்தான்குளம் விவகாரத்தில் தந்தை - மகனை விடிய விடிய லத்தியால் அடித்தது தற்போது அம்பலம் ஆகி உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதி முறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், தந்தை - மகன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்களைக் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். 

இதனையடுத்து, அன்று இரவே பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. மறுநாள் காலை தந்தை ஜெயராஜூம் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து சிறையிலேயே உயிரிழந்ததால், அப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனால், கடும் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி வியாபாரிகள், ஊர் மக்கள் அனைவரும், சாத்தான் குளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனிடையே, தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும் - மகனும் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலையத்தில் இருவருக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் நேற்று வெளியானது. குறிப்பாக, இருவரின் ஆசன வாயில் போலீசார் லத்தியை உள்ளே விட்டு கடும் சித்திரவதை செய்து கொடுமைப் படுத்தியதாவதாகவும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் உறவினர்கள் போலீசார் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இந்த செய்தி, காட்டுத் தீ போல் உலகம் முழுவதும் பரவியது. இதனால், மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு விசாரணை செய்தது.

இந்த விவகாரம் தொடர்பாக சாத்தான் குளம் காவல் நிலையத்தில் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் நேற்று முன் தினம் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின் போது, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டி.எஸ்.பி. பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும், வழக்கு ஆவணங்களைத் தர மறுத்ததாகவும் கூறி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இமெயில் மூலம் புகார் அளித்தார். 

அந்த புகாரில் குறிப்பாக, “போலீசை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று போலீசார் மகாராஜன் பேசியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், கடும் ஆத்திரமடைந்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 3 போலீசாரையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டி.எஸ்.பி. பிரதாபன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். நீதிபதியை அவதூறாகப் பேசிய காவலர் மகாராஜன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். 

மேலும், மேலும், “ஜெயராஜ் - பென்னிக்சை போலீசார் விடிய, விடிய அடித்தனர்” என்று மாஜிஸ்திரேட் பாரதிதாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனை நேரில் பார்த்தவர்கள் தன்னிடம் சாட்சி சொன்னதாகவும், அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி. குமார், டி.எஸ்.பி. பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அப்போது, தந்தை - மகன் மரணம் தொடர்பான முதல் நிலை பிரேதப் பரிசோதனை அறிக்கை, சமர்ப்பிக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில், உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். “சாத்தான்குளம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்திரேட்டை காவல் உயர் அதிகாரிகள் மற்றும் காவலர் அவமதித்தது அதிர்ச்சி அளிக்கிறது” என்று கூறினர். அப்போது, “மன அழுத்தம் காரணமாக மாஜிஸ்திரேட்டை போலீசார் அவமதிக்கும் விதத்தில் பேசிவிட்டதாக” அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர்.

குறிப்பாக, உயிர் இழந்த ஜெயராஜ் - பென்னிக்ஸ் உடலில் மோசமான காயங்கள் இருந்ததால், காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாகவும்” நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்ட ஏ.டி.எஸ்.பி. குமார், டி.எஸ்.பி. பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகிய 3 பேர் தரப்பிலும் தனித் தனியே வழக்கறிஞர்களை நியமித்து அடுத்த 4 வாரத்தில் விளக்கம் அளிக்க நீதிபதிகள் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர்.

அத்துடன், “இந்த வழக்கில் ஒரு நொடி கூட வீணாகாமல் விசாரணை நடைபெற வேண்டும் என்றும், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கும் முன் தடயங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதாகவும் நீதிபதிகள் குற்றம் சாட்டினார். அது வரை, நெல்லை சிபிசிஐடி டி.எஸ்.பி. அனில்குமார், இந்த வழக்கின் விசாரணையை இன்றே தொடங்க உத்தரவு பிறப்பித்தனர். 

இதனையடுத்து, வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான் குளம் காவல் நிலையம் தற்போது இருந்து வருகிறது. அங்கு புதிதாக நியமிக்கப்பட்ட போலீசார் பணியில் சேர்ந்துள்ளனர்.  

இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரபரப்பான அறிக்கை தாக்கல் செய்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் ஆய்வு நடத்திய நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளது.  

இதனிடையே, சாத்தான் குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலர் ரேவதியிடம் மீண்டும் விசாரணை தொடங்கி உள்ளது. சாத்தான் குளம் காவல் நிலையத்தில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் மீண்டும் விசாரணையைத் தொடங்கினார். தலைமைக் காவலர் ரேவதி, சம்பவம் தொடர்பாக ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்தார். இந்நிலையில், தனக்கு மிரட்டல் வரும் என்று ரேவதி தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை அனைத்தும், வீடியோ பதிவு செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முக்கியமாக, ஜெயராஜ் - பென்னிக்ஸை சிறையில் அடைக்க உடல் தகுதி சான்று அளித்த மருத்துவர் திடீரென தற்போது விடுப்பில் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.