சாத்தான்குளம் “ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது, சத்தியமா விடவே கூடாது” என்று நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக கூறியுள்ளார். 

தமிழகத்தில் இன்றைய ஹாட் டாப்பிக் சாத்தான் குளம் “ஜெயராஜ் - பென்னிக்ஸ் லாக்கப் டெத் விவகாரம் தான். ஜெயராஜ் - பென்னிக்ஸ் விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கண்டன குரல்களைப் பதிவு செய்திருந்த நிலையில், தமிழ் சினிமா திரையுலக பிரபலங்கள் பெரும்பாலும் தங்களது கண்டன குரல்களையும் பதிவு செய்திருந்தனர். 

இந்நிலையில், சாத்தான்குளம் லாக்கப் டெத் விவகாரத்தில் இன்று நடிகர் ரஜினிகாந்த், தனது ஆவேசமான கருத்தைக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சாத்தான்குளம் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், “ தந்தையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும்” என்று கூறியுள்ள நடிகர் ரஜினிகாந்த், “விடக்கூடாது. சத்தியமா விடக்கூடாது” என்றும் அவர் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார். குறிப்பாக, “விடக்கூடாது,சத்தியமா_விடவே_கூடாது” என்ற ஹாஷ்டேக்கையும் உருவாக்கி உள்ளார்.

அதேபோல், சாத்தான் குளம் சம்பவம் பற்றிய இயக்குனர் பாரதிராஜா, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பாக தேனியிலிருந்து கண்டன அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், “பேரிடர் காலங்களைக் கையாளும் தமிழக அரசுக்கு..” என்று தொடங்கி இருக்கிறார்.

மேலும், “நேரம் காலம் பாராமல் தன்னுயிர் பற்றி கவலைப்படாமல் சிறப்பான பணியை முன்வைக்கும் முதல்வர் மற்றும் அதிகாரிகளை நன்றியோடு பார்க்கும் அதேவேளையில், இவ்வரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் ஈன காரியங்களை சில அதிகாரிகள் தங்கள் வரம்பு மீறி செய்து விடுகிறார்கள்” என்று குறிப்பிட்டள்ளார். 

“காத்துநிற்கும் காவல் அதிகாரிகள் மத்தியில் அப்பாவி மக்களை வேட்டையாடும் சில ஓநாய்களும் கலந்துவிடுவது ஒட்டுமொத்த காவல்துறையையே பழிச் சொல்லிற்கு ஆளாக்கிவிடுகிறது என்றும், விரும்பத்தகாமல் நடந்து விடும் சில சம்பவங்களை, சமூகப் பொறுப்புடன் சுட்டிக்காட்ட நாங்கள் கடமை பட்டுள்ளோம்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“குற்றமற்றவர்களைத் தண்டிப்பதே தவறு என்ற ஜனநாயக கட்டமைப்பில் வாழும் நாம், எப்படி இரு உயிர்கள் வதைபட்டு அவதிக்குள்ளாகி மரணிக்க அனுமதித்துவிட்டோம் என்று புரியவில்லை என்றும். அந்த உயிர்களின் வலியும் வேதனையும் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு நேர்ந்தால் எப்படி துடித்துப் போவேனோ அப்படி துடித்துப் போகிறேன். அவர்களும் நம்ம வீட்டுப் பிள்ளைகள்தானே??” என்றும், இயக்குனர் பாரதிராஜா கேள்வி எழுப்பி உள்ளார். 

மேலும், “என்ன அவன் சாத்தான் குளத்திலிருக்கிறான். நான் சென்னையிலிருக்கிறேன். ஆனால் அந்த இறப்பின் வலி, வேதனை ஏன் என்னை உறங்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறது?? அதிகாரம் ஒருபோதும் அப்பாவிகளின் உயிரெடுக்க துணை போகக்கூடாது” என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். 

“இந்தக் காரியத்தில் அரசு பாதிக்கப்பட்ட மக்களின் மன உணர்வோடு கூட நிற்க வேண்டும் என்றும், தனிப்பட்ட சில மனிதர்களின் தவறு ஒரு அரசாங்கத்தின் தவறல்ல. அது அரசோ, காவல்துறை சார்ந்த உயரதிகாரிகளோ எடுத்த முடிவல்ல என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் அரசின் நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையாக அமைய வேண்டும்” என்றும் இயக்குனர் பாரதிராஜா வலியுறுத்தி உள்ளார். 

“அதுவே வரும் காலங்களில் மக்களின் மனதில் நல்லதொரு பிம்பத்தை இந்த ஆட்சிக்கு ஏற்படுத்தித் தரும். குற்றம் செய்தவர்களை பாரபட்சமின்றி இந்த அரசு கையாள வேண்டும் என்பதை ஒரு மூத்த குடிமகனாக, மக்களை நேசிக்கும் படைப்புகளைத் தந்த ஒரு படைப்பாளியாகக் கேட்கிறேன். செய்தவன் தவறுக்கான பொறுப்பை ஏற்கட்டும். நீதி அதற்கான வேலையை செய்யட்டும். இதை இந்த அரசு அழுத்தமில்லாமல் அனுமதிக்கக் கேட்டுக்கொள்கிறேன்” என்றும், இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

“காவல் இலாக்கா மட்டுமல்ல உங்கள் வசம். தனித்தனியாகத் தமிழக மக்கள் உங்கள் பொறுப்பில் தானே உள்ளார்கள்?? வேலைப்பளு, மன அழுத்தம், மனச்சுமை
காரணமாக அப்பாவி பிள்ளைகளின் உயிரை எடுத்து விட்டார்கள் என்று பதிலிறுப்பது எந்த விதத்திலும் ஈடாகாத பரிவற்ற குரலாகவே பார்க்கிறேன்” என்றம் தனது கண்டனத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

“கொரானா காலத்தில் மருத்துவர்களுக்கு இல்லாத பணிச்சுமையா?? தூய்மைப் பணியாளருக்கு இல்லாத மன அழுத்தமா?? பொருளாதாரம் இழந்து வருமானம் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு இல்லாத நெருக்கடியா?? இப்படி  மன அழுத்தத்தில் அனைவரும் தவறான முடிவு எடுத்தால் என்ன ஆவது??” என்றும் இயக்குனர் பாரதிராஜா ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

“எனவே தமிழக அரசு, தமிழகத்தில் வேலைப்பளுவால், பொதுமக்களை வதை பிணமாக்கும் மனம் அழுத்தம் யாரேனும் கொண்டிருந்தால், அக்காவலர்கள் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள். விடுப்பில் சென்று மன அமைதி கொள்ளட்டும். நேரடியாக அரசின் கீழ் பணிபுரிபவர்கள் கவனமற்று தன்னிலை இழந்து செயல்படுவது எத்தனை அவப்பெயரை உலக அளவில் அலைகளாக்கி விடுகிறது என்பதை ஒவ்வொரு அரசுப் பணியாளர்களும் கவனத்தில் கொள்ள வலியுறுத்த வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

“மக்களாகிய நாங்கள் எங்கள் உயிர் காத்து நிற்கும் காவலர்களுக்கு நன்றிக் கடன் கொண்டுள்ள இந்நேரத்தில் இப்பெருங்குற்றம் மற்ற கடமையாளர்களின் பெரும்பணியை மறக்கடிக்கச் செய்கிறது என்பது என்னைப் பொருத்தவரை விசனமே” என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 

“அகால மரணமடைந்த ஜெயராஜனுக்கும் பென்னிக்ஸுக்கும் மட்டுமல்ல, இந்த பேரிடரைப் பார்த்துப் பார்த்துக் கையாளும் அரசுக்கும் பெரும் அநீதி இழைத்துள்ளார்கள் சாத்தான் குள காவல் அதிகாரிகள் என்பதை முதல்வர் மனதாரப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் அவர் இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“இக்குற்றத்தின் போது, உடனிருந்த காவலர் ரேவதி மனசாட்சியின்படி நடந்துகொண்டதைப் பார்க்கும்போதும்.. சில காவல் துறை உயரதிகாரிகளே கண்டித்திருப்பதும் மன ஆறுதலைத் தருகிறது. அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காவலர் ரேவதியின் பாதுகாப்பை இவ்வரசு உறுதிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்” என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

“இச்சம்பவத்தில் தானாக முன் வந்து வழக்கை எடுத்துக் கொண்ட மதுரை உயர் நீதி மன்றத்திற்கும் நீதியரசர்களுக்கும் நன்றிகள். என்றும், இரவு பகல் பார்க்காமல், கொரானாவின் தாக்கம் கண்டு தனியறைக்குள் புகுந்துகொள்ளாமல் முகக்கவசத்தை அணிந்துகொண்டு களப்பணியாற்றும் உங்கள் ஒட்டுமொத்த நற்பெயரை ஒரே சம்பவத்தில் சிதைத்த அக்கொடூரர்களை மேலும் மக்கள் பணி செய்யவிடாமல் தடுப்பதே பாதிக்கப்பட்ட உங்களுக்கும் அவ்வப்பாவிக் குடும்பத்திற்கும் ஈடுகட்டப்பட்ட நீதியாகப் பார்க்கப்படும்” என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 

“ஆதலின் என் குரலை ஒவ்வொரு தமிழனின் ஆதங்கக் குரலாக எடுத்துக் கொண்டு.. துறைரீதியான கடுமையான நடவடிக்கைகளை அக்கொடியோர் மீது மேற்கொள்ள வேண்டும் என தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவையின் சார்பாகவும்.. ஒட்டுமொத்த திரையுலகின் சார்பாகவும் வலியுறுத்துகிறேன்” என்றும் இயக்குனர் பாரதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.