நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3 ஆம் தேதி தூக்கில் போட, டெல்லி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில், 5 பேர் கொண்ட கும்பலால் நிர்பயா என்ற பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு, ரோட்டில் தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி மரண வேதனை அனுபவித்து, பரிதாபமாக உயிரிழந்தார்.

Nirbhaya case convicts to be hanged on March 3

இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தொடர்ந்து தப்பி வந்தனர். குறிப்பாக, குற்றவாளிகள் அனைவருக்கும், தூக்குத் தண்டனை தேதி, நேரம் எல்லாம் அறிவிக்கப்பட்ட பிறகும், தொடர்ந்து 2 வது முறையாகத் தூக்குத் தண்டனை தடைப்பட்டது.

இதனிடையே, குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக, மீண்டும் நீதிமன்றத்தில் குற்றவாளி வினய் சர்மா, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உடல் மற்றும் மனதளவில் குற்றவாளி அனைவரும் நலமுடன் உள்ளதாகத் தெரிவித்து, குற்றவாளி வினய் சர்மாவின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, அதிரடியாக உத்தரவிட்டது.

இதனிடையே, குற்றவாளிகள் சட்ட வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி விட்டதால், தூக்கு தண்டனை தேதியை நிர்ணயிக்குமாறு திகார் சிறை நிர்வாகம் கேட்டுக்கொண்டது. 

அதன்படி, குற்றவாளிகள் அனைவரும் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என்பது உறுதியானது. 

இந்நிலையில், நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் அனைவரையும் வரும் மார்ச் மாதம் 3 ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு தூக்கிலிட, டெல்லி நீதிமன்றம் தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

இதனிடையே, குற்றவாளிகளைத் தூக்கில் போடுவதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் சிறைத்துறை நிர்வாகம் தற்போது மேற்கொண்டு வருகிறது.