தமிழக சட்டப் பேரவையில் நீட் விலக்கு மசோதா திமுக தாக்கல் செய்த நிலையில், காரசார விவாதம் எழுந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை 3 நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று காலை சட்டப் பேரவை கூடியது. அப்போது, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் மசோதா, இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதாவது, தமிழகத்தில் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த குழு தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் தமிழக சட்டசபையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அதே நேரத்தில், இன்றைய சட்டசபை கூட்டத்திற்கு அதிமுக எம்எல்ஏ க்கள் கருப்புப் பட்டை அணிந்து சட்ட சபைக்கு வருகை தந்தனர். 

“நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷ் மறைவுக்காகவும், வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் வெட்டிக் கொல்லப்பட்டதற்காகவும் கருப்பு பட்டை அணிந்து வந்ததாக” அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளித்தர்ன.

அதன் படி, இன்று சட்டசபை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. கஞ்சா விற்பனை குறித்து காவல் துறையில் புகாரளித்த வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். 

அப்போது, நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சட்டசபையில்  திமுக - அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்ட சபையில்  இருந்து வெளி நடப்பு செய்தனர்.

அந்த நேரத்தில், நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய மசோதாவை, சட்ட சபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்து பேசினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ நீட் நுழைவுத்தேர்வுக்கு நிரந்தர விலக்குக்கோரும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக” குறிப்பிட்டார்.

“அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெறும் வகையில், சட்ட மசோதா இருக்கும் என்றும், நீட் தேர்வினை திமுக தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது” என்றும், சுட்டிக்காட்டினார். 

“திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை தொடங்கி உள்ளோம் என்றும், அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவு தர வேண்டும் என்றும்” அவர் கேட்டுக்கொண்டார்.

“மருத்துவ படிப்பிற்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம் என்றும், சிஏஏ சட்டம் வந்த போதே நீட் தேர்வுக்கு விலக்கு கொடுத்தால், அந்த சட்டத்தை ஆதரிக்கிறோம் என அதிமுக கூறியிருக்கலாம் என்றும், ஆனால் அதைச் செய்ய அதிமுகவுக்கு சக்தி இல்லை” என்றும், பகிரங்கமாகவே முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.

அத்துடன், “நீட் தேர்வை எதிர்ப்பதற்கான எந்த திராணியும் அதிமுக வுக்கு இல்லை” என்றும், வெளிப்படையாகவே விமர்சனம் செய்தார். “சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் சமவாய்ப்பை நிலை நிறுத்தவும், மாணவர்களிடம் பாகுபாடு காட்டுவதில் இருந்து பாதுகாக்கவும் நீட் விலக்கு சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்து உள்ளது” என்றும், அவர் தெரிவித்தார்.

“கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வானது சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தி உள்ளது என்றும், நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது என்றும், சிறப்புப் பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின், பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

“நீட் தேர்வு காரணமாகக் கடந்த 4 ஆண்டுகளில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையும் கனவுகளும் தகர்ந்துள்ளது” என்றும், அவர் கவலைத் தெரிவித்தார்.

“நீட் ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினர்  அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது” என்றும், முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.