“கிழக்கிந்திய கம்பெனி போல, வடக்கில் பாஜக வடக்கிந்திய கம்பெனியாக உள்ளது” என்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பகிரங்கமாகத் தாக்கி பேசி உள்ளார்.

இந்தியா முழுவதும் பெகாசஸ் உளவு சர்ச்சை விவகாரம் தற்போது மிகப் பெரிய பிரச்சனையாக எழுந்து உள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் உள்பட ஒட்டுமொத்தமாக 300 இந்தியர்களின் போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி, ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் புயலைக் கிளப்பிக்கொண்டு இருக்கிறது.

இவற்றுடன், வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளும் இந்தியாவில் பூதாகாரமாக வெடித்துக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக, நாடாளுமன்றம் இன்றுடன் 11 வது நாளாக முடங்கிப்போய் உள்ளது. 

முக்கியமாக, மத்திய அரசுக்கு எதிராக தற்போது ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து, ஒரே அணியாக நிற்கிறது.

இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “நேர்மையாக எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி” என்று, தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு வாக்களித்த மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும் வணக்கம் தெரிவிக்கவே கோவை வந்துள்ளேன்” என்றும், குறிப்பிட்டார்.

அத்துடன், “கோவையில் மக்களை நான் சந்தித்து நன்றி கூற இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது மக்களை எண்ணித்தான் என்றும், மக்களின் நலன் பார்த்தே ஆளுங்கட்சி செயல்பட்டு வரும் நிலையில், அழுத்தம் எதுவும் கொடுக்கவில்லை” என்றும், கூறினார்.

“கொங்கு நாடு அரசியல் கோஷம் மட்டுமே, மக்கள் தேவை அல்ல என்றும், கோவை மக்களுக்குத் திட்டங்களில் பிரிவினை பார்க்கப்படுகிறது” என்றும், தெரிவித்தார். 

மேலும், “உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பங்கு மட்டுமே இருக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, “கிழக்கிந்திய கம்பெனி போல, வடக்கில் பாஜக எனும் வடக்கிந்திய கம்பெனி தயாராகி வருகிறது” என்றும், அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

முக்கியமாக, “மேகதாது விஷயத்தில் பாஜக தற்போது இரட்டை வேடம் போடுகிறது” என்றும், அவர் வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார்.

“கொரோனா நடவடிக்கையில் ஆளுங்கட்சி முடிந்ததைச் செய்கிறது என்றும், இன்னும் அதிகமாக, தீவிரமாகச் செயல்பட வேண்டும்” என்றும், கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.

“தோல்வியை சினிமாவிலும் கற்றிறுக்கிறேன் என்றும், கோவை மக்கள் எங்களுக்கு நம்பிக்கையை அளித்து உள்ளார்கள் என்றும், இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுப்பது எங்கள் பணி” என்றும், அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

“தேர்தலின் போது, கொடுத்த வாக்குறுதிகளை ஏமாற்றுவது தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்குப் புதிதல்ல என்றும், பென்னிகுயிக் சிலையை இடம் மாற்றுவதை அரசு உடனே கைவிட வேண்டும்” என்றும், கமல்ஹாசன் கோரிக்கை விடுத்தார்.