சீனாவுக்கு பதிலடி; 4 கி.மீ., உள்ளே புகுந்த இந்திய ராணுவம்!

சீனாவுக்கு பதிலடி; 4 கி.மீ., உள்ளே புகுந்த இந்திய ராணுவம்! - Daily news

கடந்த ஜூன் மாதம் கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதலில், ஒரு காலாட்படை பட்டாலியன் கட்டளை அதிகாரி உட்பட 20 இந்திய வீரர்கள் (Indian soldiers) கொல்லப்பட்டனர். அந்த பகுதியில் கடந்த 40 நாட்களாக இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 

இதுபற்றி வெளிவந்த ஆரம்ப அறிக்கையில், ஒரு அதிகாரி மற்றும் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் அறிவித்தது. ஆனால் அன்று மாலையில், இராணுவத்தின் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், உயரமான நிலப்பரப்பில் பூஜ்ஜிய வெப்பநிலையில் (Zero Temperatures)நடந்த மோதலில் 17 இந்திய வீரர்கள் கடுமையாக காயமடைந்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளனர் எனக் கூறப்பட்டது.
மேலும் இருநாட்டு வீரர்களும் ஒருவருக்கொருவர் கற்கள், கம்பி மற்றும் ஆணி பதித்த ஆயுதங்களால் சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தாக்கிக் கொண்டனர் என கூறப்பட்டது. உயிர்சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து, விவகாரம் விஷ்வரூபம் எடுத்தது.
 
இதையடுத்து, இந்தியா - சீனா இடையே ராணுவ மட்டத்திலும், தூதரக மட்டத்திலும் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற தொடங்கியது. எனினும், குறிப்பிட்ட அளவு தூரம் மட்டுமே சீன படைகள் பின்வாங்கியுள்ளன என்று சொல்லப்பட்டது. இதனால், எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்த வண்ணமே இருந்தது.

எல்லையில் போர்ப்பதற்றம் அதிகரித்தது. இரு  தரப்பும் படைகளை குவிக்கத் தொடங்கின. தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு படைகளை விலக்கிக்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்பின்னர் எல்லையில் அமைதி திரும்பத் தொடங்கியது.  தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்நிலையில், ஒப்பந்தத்தை மீறி லடாக்கில் தற்போது சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் மூன்று நாள்களுக்கு முன் (ஆகஸ்ட் 31) தெரிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 29ம் தேதி நள்ளிரவில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், எல்லையில் நிலைமையை மாற்ற ஆத்திரமூட்டும் செயல்களை மேற்கொண்டதாகவும் இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் கர்னல் அமான் ஆனந்த் தெரிவித்தார்.
 
இந்திய வீரர்கள் பாங்காங் சோ ஏரியின் தெற்கு கரையில் சீன ராணுவத்தின் செயல்பாட்டை முன்கூட்டியே நிறுத்தி, நமது நிலைகளை வலுப்படுத்தவும், சீன படைகளின் நோக்கங்களை முறியடிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கர்னல் அமான் ஆனந்த் கூறினார்.

தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக ராணுவ தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சீனர்கள் ஆக்கிரமித்துள்ள ரெக்கின் கணவாய் பகுதியில், சீனர்கள் முகாம் அமைத்துள்ளனர். ரெக்கின் பகுதிக்கு அருகே, ஸ்பாங்கூரிலும் சீனர்களுக்கு இரு முகாம்கள் உள்ளன. மேலும் சீனர்கள் ரெக்கினுக்கு அருகில் ஒரு மின்னணு கண்காணிப்பு கோபுரத்தையும் சில ஆண்டுகளுக்கு முன் கட்டியிருந்தனர்.

இந்நிலையில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்திவந்த ரெக்கின் கணவாய்ப் பகுதியில், 4 கி.மீ., தூரத்துக்கு இந்தியப் படைகள் முன்னேறி உள்ளதாகவும் அப்பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த ஆக., 31ம் தேதி, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கிழக்கு லடாக்கில் எதார்த்த கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே, பாங்கோங் ஏரியின் தெற்கு கரையிலும், ரெக்கின் கணவாய் பகுதியிலும் இந்தியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது,'' எனத் தெரிவித்திருந்தார்.

'இந்த ரெக்கின் கணவாய் பகுதிகள் இந்திய ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் வந்தால், அதன் பக்கவாட்டில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலமும், மலைப்பாதையில் பயணிப்பதன் மூலமும், இந்திய ராணுவ வீரர்கள் ஸ்பாங்கூரில் உள்ள சீன முகாம்களையும் அழித்தொழிக்க முடியும்' என, ராணுவ வீரர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment