இந்தியாவில் மேலும் 47 செயலிகளுக்கு தடை! - மத்திய அரசு அதிரடி

இந்தியாவில் மேலும் 47 செயலிகளுக்கு தடை! - மத்திய அரசு அதிரடி - Daily news

கடந்த மாதத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை தடை செய்திருந்தது. மேலும் ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் சில செயலிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்காக, அரசின் மீது, பலரும் விமர்சனங்கள் வைத்திருந்தனர்.

பின்னர், அந்த செயலிகளுக்குப் போட்டியாக இந்தியா சார்ப்ல் செயலிகள் உருவாக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட செயலிகளைக் கொண்டு, உலகின் நம்பர் ஒன் மொபைல் போன் உற்பத்தி மையமாக இந்தியா உருவாக வேண்டும் என்று, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருந்தார். அதேபோல நாட்டில் தற்போது 200 புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார் அவர். இதனால் இந்தியாவில் செயலிகளுக்கான சந்தையில் உள்நாட்டினுக்குச் சிறந்த வாய்ப்புகள் உள்ளதாகவும் சொல்லப்பட்டு வந்தது.

குறிப்பாக டிக்டாக் போன்ற செயலிகளால் தங்களது சந்தை மதிப்பை இழந்திருந்த ரோபோசோ, ஷேர்சாட் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் மீண்டும் தங்களின் சந்தை மதிப்பையும் வாடிக்கையாளர்களையும் அதிகரிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதை  நம்ப முடியாத வகையில் பயனாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ரோபோசோ நிறுவனம் அறிவித்திருந்தது.

இதுபற்றி நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர், ``இந்தியர்களின் தரவுகளை வெளிநாட்டினர் திருட அனுமதிக்க முடியாது என்றும், அரசு அதன் இறையாண்மையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது" என்று கூறியிருந்தார். நாடாளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவால் ஆராயப்பட்டு, தரவுகள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது என்று கூறியிருந்தார்.

இந்தியா - சீனா இடையில் எல்லையில் பதற்றங்கள் அதிகரித்து, லடாக்கின் கல்வான் பகுதியில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து,  சீனாவுடன் வர்த்தகத்தைக் குறைக்கவேண்டும், சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்தியாவில் வலுவடைந்து வந்தன.

அதைத் தொடர்ந்துதான், இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சீன நிறுவனங்களின், டிக்டாக்  ஹலோ, உட்பட 59 செயலிகளை தடைசெய்வதாக இந்திய அரசு, கடந்த மாதம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும் எல்லைப் பிரச்னைக்கும் இதற்கும் தொடர்பில்லை எனச் சொல்லியது அரசு. இப்போதோ, இந்தியாவில் உற்பத்தி மையம் பெருகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இரண்டுக்கும் தொடர்பு உண்டோ என்ற கோணத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றது. 

இந்தியாவின் இந்த நடவடிக்கையைப் பார்த்த பிற நாடுகள், தாங்களும் இதைப் பின்தொடரலாம் என முடிவு செய்துள்ளனர். அந்த வரிசையில், ஆஸ்திரேலியாவில் சீன செயலிகள் தடை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது,அமெரிக்காவும் சீன செயலிகளைத் தடுக்கவிருப்பதாகக் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.

சீன செயலிகளை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது அமெரிக்காதான்.

அமெரிக்காவின் வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பாம்பியோ, இதை தனது பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். தங்களின் அதிகாரிகளோடு கலந்தாலோசித்த பின், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த கருத்தைத் தெரிவிப்பார் எனக்கூறியிருக்கிறார் மைக்.
 
ட்ரம்ப், கொரோனா வைரஸ் பரவுதல் விஷயத்தில், ஏற்கெனவே சீனா மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வந்தது, அனைவரும் அறிந்த விஷயம். சீனாவும், உலக சுகாதார நிறுவனமும் சேர்ந்துதான் கொரோனா பற்றிய விவரங்களை மறைத்துவிட்டதாகவும், அதனால்தான் இன்று அமெரிக்கா இவ்வளவு மோசமான பாதிப்புகளை சந்திப்பதாகவும் கூறியிருந்தார் ட்ரம்ப். இதை அடிப்படையாக சொல்லி, அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்துக்கு தரும் நிதியையே நிறுத்தியவர் ட்ரம்ப். அந்த அளவுக்கு சீனாவுடன் முரண்பட்டிருக்கும் ட்ரம்ப், இந்த செயலிகள் விஷயத்திலும் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக்கூடும் என கணிக்கிறார்கள் சிலர்.

செயலிகள் வழியாக இப்படி நாடுகளும் நாடுகளும் மோதிக் கொள்வது, சற்றே வேடிக்கையாக தெரிந்தாலும், இந்த மாதிரியான நடவடிக்கைகள் யாவும் எந்தவொரு நாட்டையும் பாதிக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை. அனைத்துமே தனியார் நிறுவனங்களையே பாதிக்கும் என்பதுதான் நிதர்சனம். 

இப்படி முற்றிக்கொண்டிருக்கும் செயலிகள் மீதான இந்த விதிமுறைகளில், மேலும் பல சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. இதற்கிடையில், ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயலிகளின் குளோன் (அதாவது ஒரிஜினல் செயலியைப் போல இயங்கும் போலி) ஆக இயங்கிய 47 செயலிகளுக்கு மத்திய அரசு இப்போது தடை விதித்துள்ளது.

மேலும், 275 சீன செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், இந்த செயலிகளின் தகவல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அவற்றுக்கும் தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

செயலிகள்  'இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு எதிராக செயலிகள் ஈடுபட்டுள்ளன. இதுபோன்ற கவலைகள் நம் நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றன என்பது சமீபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும் சில மொபைல் செய் தவறாகலிகளை பயன்படுத்துவது குறித்து பல அறிக்கைகள் உட்பட பல்வேறு புகார்கள்ள் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு வந்துள்ளது.இவைகள் இந்தியாவுக்கு வெளியே இருப்பிடங்களைக் கொண்ட சேவையகங்களுக்கு பயனர்களின் தரவை அங்கீகரிக்கப்படாத முறையில் திருடி மறைத்து அனுப்புகிறது.

 

- பெ.மதலை ஆரோன்

Leave a Comment