வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பாம்பன் துறைமுகத்தில் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, புயலாக வலுப் பெற்று நாளை மாலை கரையை கடக்கும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால், காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக் கடலில் நிலை கொண்டு இருக்கிறது. 

“இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்” என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

புதிதாக உருவாகும் இந்த புயலுக்கு பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட “குலாப்” பெயர் வைக்கப்படுகிறது.

வட மேற்கு திசையை நோக்கி நகரும் புயலானது, ஒடிசா - ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கிறது.

தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு இடையே கலிங்கப்பட்டினத்தில் நாளை மாலை கரையை கடக்கும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. 

வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது.

மேலும், வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொண்டி, திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடந்த ஒருவார காலமாக மிதமான கன மழை பெய்து வருகிறது.

“வட கிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில், வங்கக் கடலில் ஒடிசாவின் கோலாப்பூரிலிருந்து கிட்டதட்ட 670 கிலோ மீட்டர் கிழக்கு தெற்காகவும், ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டிணத்திலிருந்து சுமார் 740 கிலோ மீட்டர் கிழக்காகவும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும்” வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக, எச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் பாம்பன் துறைமுகத்தில் தற்போது ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. 

இவற்றுடன் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் பகுதிகளில் காற்றின் வேகம் சற்று கூடுதலாக இருந்து வருவதாகவும், அந்த பகுதிகளில் கடல் சற்று கொந்தளிப்புடன் காணப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.