கோவாக்ஸின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் சோதனையில், முக்கிய அறிவிப்பு!

கோவாக்ஸின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் சோதனையில், முக்கிய அறிவிப்பு! - Daily news

ஒரேநாளில் 40,000 நோயாளிகள், மொத்தமாக 11 லட்சத்துக்கும் மேலான கொரோனா நோயாளிகள் என இந்தியா ஒவ்வொரு நாளும் கொரோனா விஷயத்தில் உச்ச நிலையை அடைந்து கொண்டே இருக்கின்றது. ஏறத்தாழ 6 லட்சம் உயிரிழப்புகள் கொரோனாவால் உலகம் முழுக்க இதுவரையில் ஏற்பட்டுவிட்டது. தடுப்பூசி வரும்வரையில் கொரோனாவுக்கு விடிவுகாலமே இல்லையென மருத்துவ வல்லுநர்கள் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். 

இதைத்தொடர்ந்து, தடுப்பூசிக்கான பணிகள் அனைத்தும் நாடுகள் தோறும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாடும், தாங்கள்தான் முதலில் தடுப்பூசியைக் கண்டறிய வேண்டும் எனத் தீவிரமாக எண்ணிக் கொண்டிருக்கிறது. இந்தியா சார்பில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, `தடுப்பூசி தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும்' எனக் கூறியிருக்கிறார்.

இந்தியாவைப் போல கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் உலகின் பல்வேறு நாடுகள், இறுதிக் கட்டத்தை நோக்கி தற்போது நகர்ந்துள்ளன.

அந்தவகையில் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பல சோதனைகளுக்குப் பின்னர் இறுதியாக மனிதர்களுக்குக் கொடுத்துச் சோதித்து வருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில், இப்போதைக்கு 7 நிறுவனங்கள் தடுப்புப் பணியில் இறங்கி உள்ளன. பிற நிறுவனங்கள் அனைத்தும் முதற்கட்ட ஆய்வில் இருக்கும் இந்த நேரத்தில், ஐதராபாத்தைச் சேர்ந்த  பாரத் பயோடெக் நிறுவனம் மட்டும், மனிதர்கள் மீதான முதல் இரண்டு கட்ட பரிசோதனைகளுக்கு அனுமதியைப் பெற்றுவிட்டது. இந்த நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவுடன் இணைந்து தங்கள் தடுப்பூசி சோதனைகளைச் செய்து வருகிறது. இவர்களின் விலங்குகள் மீதான ஆய்வுகள் முடிந்துவிட்ட சூழலில், மனிதர்கள் மீதான ஆய்வுகள் தொடங்கப்பட உள்ளது.

மனிதர்கள் மீதான ஆய்வில், இந்த மருந்தை சில நாட்களுக்கு முன் மூன்று நபர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த  சோதனையை நடத்த நாடெங்கும் உள்ள 12 மருத்துவமனைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கே தேர்வு செய்யப்பட்டுள்ள மனிதர்கள் மத்தியில் சோதனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக, இதில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்கள் மீதான சோதனை இன்று தொடங்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மொத்தம் 12 மருத்துவமனைகளிலும் மொத்தம் 375 பேர் இந்தத் தடுப்பு மருந்து பரிசோதனைக்கு தற்போது உட்படுத்தப்பட இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இவர்களில் 100க்கும் மேற்பட்டோர், எய்ம்ஸை சேர்ந்த தன்னார்வலர்களாக இருப்பார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு சோதனை செய்யப்படுவோரில் சிலருக்கு உண்மையான தடுப்பு மருந்தும் வேறு சிலருக்குத் தடுப்பு மருந்து என்னும் பெயரில் உடலில் எவ்வித விளைவும் உண்டாக்காத சத்து மருந்தும் அளிக்கப்பட உள்ளன. அதில் யாருக்கு உண்மையான மருந்து தரப்படுகிறது மற்றும் யாருக்குச் சாதாரண மருந்து தரப்படுகிறது என்பது மருந்தைப் பெறுபவர் மற்றும் செலுத்துவோருக்குச் சொல்லப்படாது. இந்த மனித சோதனையின் முதல் கட்டத்தில் எதிர்மறை விளைவுகள் ஏற்படுமா என்பது சோதிக்கப்படும். இரண்டாம் கட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்து அந்த வைரஸூக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்பது பரிசோதிக்கப்படும்.

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் முழு உடல் தகுதியுடன், எந்த வித நோயும் இல்லாமல் இருத்தல் வேண்டும். அவர்கள் வயது 18 வயது முதல் 55 வயது வரை இருக்க வேண்டும் என்றும் அந்த நபர்களுக்கான பதிவு இன்று முதல் தொடங்கும் என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் சஞ்செய் ராய் தெரிவித்துள்ளார்.

சோதனைக்கு விருப்பம் தெரிவிக்கும் நபர்கள் ctaiims.covid19@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மூலம் பதிவு செய்துகொள்ளலாம். அல்லது 7428847499 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம் என்றும் மருத்துவர் சஞ்செய் ராய் தெரிவித்துள்ளார்.

அதேபோல தன்னார்வலராக இருப்பவர்களுக்கு, இதற்கு முன் கொரோனா ஏற்பட்டிருக்கக்கூடாது என்றும், வாழ்வியல் நோய் பாதிப்பு ஏதும் இருக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

 

- ஜெ.நிவேதா

Leave a Comment