“யாரும் வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம்” முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தல்!
By Aruvi | Galatta | 02:38 PM
“கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் யாரும் வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம்” என்று
முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் நிலையில், தமிழகத்திலும், அதன் அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
இதனால், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தேவையின்றி யாரும் வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல், “கூட்டம் நிறைந்த இடங்களுக்கு முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் யாரும் செல்ல வேண்டாம்” என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், “தமிழகம் முழுவதும் LKG முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“அனைவரும் வீட்டிற்குள் நுழையும்போது, சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும் என்றும், அனைவரும் தன்னை சுற்றியுள்ள இடத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
“தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரும் பொது இடங்களில் கூடுவதை 15 நாட்கள் தவிர்க்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
அதேபோல், தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்கள் உட்பட மொத்தம் 31 மாவட்டங்களில் உள்ள திரையரங்குள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக கூடும் இடங்களை மூடவும் முதலமைச்சர் பழனிசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.