“ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தால் நடவடிக்கை”- சென்னை ஏடிஜிபி எச்சரிக்கை
By Aruvi | Galatta | 01:18 PM
“ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தால் நடவடிக்கை பாயும்” என்று சென்னை ஏடிஜிபி ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாகத் தமிழகத்தில் ஆபாச படத்தைப் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்து பரப்புவார்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.
அத்துடன், பெண்களின் ஆபாச படங்களை வழங்கும் இணையதளங்களுக்களையும் போலீசார் முடக்கி வருகின்றனர். ஆனால், இன்னும் சில ஆபாச தளங்கள் செயல்பட்டுக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆபாச படங்களைப் பரப்பியதாக இதுவரை 12 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, “இனி செல்போனில் ஆபாச படங்களை வைத்திருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ஏடிஜிபி ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், “தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சற்று குறைந்துள்ளதாகவும்” அவர் கூறினார்.
அதேபோல், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் முறை தமிழகம் முழுவதும் உள்ளது என்றும், பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களின் பட்டியல் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆவணம் செய்யப்பட்டு வருவதாகவும் ஏடிஜிபி ரவி தெரிவித்தார்.
குறிப்பாக, குற்றமில்லா தமிழகம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஏடிஜிபி ரவி, தமிழக மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.