“தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பட்டியலில் இணைக்கப்பட்டு உள்ளதாக” தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பாரம்பரிய மிக்க பல விளையாட்டுகள் நடைமுறையில் இருந்து வந்த நிலையில், இன்று பல விளையாட்டுக்கள் காலப் போக்கில் மறைந்து போய்கொண்டு இருக்கின்றன.

அதிலும் தமிழர்களின் வீரம் செறிந்த விளையாட்டாகப் பார்க்கப்படும் சிலம்பத்திற்கு, ஒவ்வொரு தமிழர் திருநாளிலும் மற்றும் தமிழ் சார்ந்த கலை நிகழ்வுகளிலும் சிலம்பம் விளையாட்டு நடத்தப்படும்.

எனினும், “தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாகச் சேர்க்க வேண்டும்” என்பது, தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

இந்த நிலையில் தான், தமிழகத்தின் சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.

இது குறித்து ற்றுசூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக்கவும், தமிழர்களின் வீரக்கலையாம் சிலம்பத்தை உலகறியச் செய்யும் நோக்கத்திலும், மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் சேர்த்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவுரையின் படி கோரப்பட்டது” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

“இதனையேற்று, சிலம்பம் விளையாட்டினை மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்து புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழான விளையாட்டின் மூலம், அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவித்தல் என்ற கூறில், சிலம்பம் விளையாட்டினை மத்திய அரசு சேர்த்து உள்ளது” என்றும், கூறியுள்ளார்.

அத்துடன், “தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது” என்றும், குறிப்பிட்டுள்ள அமைச்சர் மெய்யநாதன், “தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டம் என்பது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை” என்றும், அதன் பெருமைகளைக் கூறி விவரித்து உள்ளார்.

“தற்போது ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தை ஆர்வமுடன் கற்று வருகின்றனர்” என்றும், அவர் மேலும் கூறியுள்ளார்.

குறிப்பாக, “தமிழ்நாட்டில் திருவிழாக்களிலும், கோயில் விழாக்களிலும் சிலம்ப விளையாட்டு தவறாது இடம் பெற்று வருகிறது என்றும், ஏனைய பழங்குடியின விளையாட்டுகளுடன் சேர்த்து சிலம்பத்தையும் மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய விளையாட்டு ஆணையத்தையும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது” என்றும், அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்து உள்ளார்.