12 ஆம் வகுப்பு வேதியியல் பாடத்தில் கூடுதலாக 3 மதிப்பெண்கள்!
By Aruvi | Galatta | May 28, 2020, 06:37 pm
12 ஆம் வகுப்பு வேதியியல் பாடத்தில் மாணவர்களுக்கு கூடுதலாக 3 மதிப்பெண் வழங்க விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, சென்னை நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பணியில், சென்னை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர தமிழகம் முழுவதும் சுமார் 43 ஆயிரம் ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், வேதியியல் தேர்வில் புரதங்கள் மற்றும் குளோபுலார் புரதங்கள் என்ற தலைப்பில் 31 வது கேள்வியாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு மாணவர்கள் பதிலளித்திருந்தால், அவர்களுக்கு மட்டும் 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், “இதே போன்று வேறு பாடங்களிலும் வேறு ஏதாவது தவறு இருந்தால், அதற்குரிய கூடுதல் மதிப்பெண்களும் வழங்கப்படும் என்றும், இது தொடர்பாக அனைத்து கேள்விகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருப்பதாகவும்” தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, மொழிபெயர்ப்பில் பிழை இருந்ததால், அந்தக் கேள்விக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.