தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக #T20 போட்டிக்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், #IPL2022 -ல் ஜொலித்த இளம் வீரர்களுக்கும் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

#IPL2022 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் அனைத்தும் நடந்து முடிவடைந்து உள்ள நிலையில், நாளை முதல் ப்ளே ஆஃப் சுற்றுக்கான போட்டிகள் நடைபெற உள்ளன. 

இப்படியான சூழலுக்கு மத்தியில் தான், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான #T20 போட்டியானது வரும் ஜூன் 9 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதன்படி, இந்த போட்டியானது வரும் ஜூன் 9 அன்று டெல்லியில் தொடங்க இருக்கிறது. 

இந்த நிலையில் தான், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக #T20 போட்டிக்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்த #IPL2022 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்கள் பலருக்கும் புதிதாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

அதன்படி, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கியமான சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக #T20 போட்டிக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருடன், துணை கேப்டனாக ரிஷாப் பண்ட் அறிவிக்கப்பட்டு உள்ளார். 

புதிய கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே, “நடப்பு #IPL2022 தொடரில் பெரிய பெரிய சாம்பியன் அணிகளை சாய்த்து, அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ப்ளே ஆஃப் வரை கே.எல்.ராகுல் வெற்றிகரமாக அழைத்துச் சென்றது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

குறிப்பாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான #T20 போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். 

முக்கியமாக, இந்த #IPL2022 சீசனில் அற்புதாமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அறிமுக இளம் வீரர்களான உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோரும் இந்திய அணியில் இந்த முறை வாய்ப்புகள் அளிக்கப்பட்டு உள்ளது. 

அதே போல், இளம் நட்சத்திரங்களாக இந்த #IPL2022 சீசனில் ஜொலித்த ஆவேஷ் கான், யஸ்வேந்திர சாஹல் ஆகியோரும் இந்த முறை இந்திய அணியில் இடம் பெற்று உள்ளனர். 

இவர்களைப் போலவே, ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் ஆகியோரும் இந்திய அணியில் தற்போது இடம் பெற்று உள்ளனர்.

அதன்படி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில்,

கேஎல் ராகுல் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன் - விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர்,  இஷான் கிஷன், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகிய 18 பேர் தேர்வாகி உள்ளனர்.

ஆனால், “இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் மீண்டும் இடம் பிடிப்பார் என்றும். அவரது சிறப்பான பந்து வீச்சை இந்திய அணி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், மாறாக தவறவிட்டுவிடக் கூடாது” என்றும், சில வாரங்களுக்கு முன்பு சுனில் கவாஸ்கர் கூறியிருந்த நிலையில், அவரது பெயர் இந்த முறை இந்திய அணியில் இடம் பெறவில்லை.

அதே போல், தென்னாப்பிரிக்கா தொடருக்கான #T20 இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு, இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக, பலரும் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளனர்.

முக்கியமாக, இந்திய #T20 அணியில் ஷிகர் தவானை, இந்திய அணியில் ஏன் சேர்க்கவில்லை?” என்று, முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா  கேள்விகளை எழுப்பி, கடுமையாக விமர்சித்து உள்ளார்.