ஐ.பி.எல். கிரிக்கெட்டில், 193 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பந்துவீச்சில் மிரட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 15-வது சீசன் ஐபிஎல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 24-வது லீக் போட்டி மும்பையில் உள்ள டி.ஒய் பட்டேல் மைதானத்தில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் மேத்யூ வேட் ரன் அவுட், 12 ரன்களிலும்  விஜய் ஷங்கர் 2 ரன்களிலும், சுப்மன் கில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.பின்னர் வந்த ஹார்திக் பாண்டியா, அபினவ் மனோகர் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தனர்.

மேலும் அபினவ் மனோகர்  சிறப்பாக விளையாடியவர் 43 ரன்களிலில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் மில்லர், ஹார்திக் பாண்டியா இருவரும் பந்துகளை, பவுண்டரி  சிக்சருக்கு பறக்கவிட்டனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் 4 இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய ஹார்திக் பாண்டியா 52 பந்துகளில் 87 ரன்களும்,டேவிட் மில்லர் 14 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர். இதனைத்தொடர்ந்து 193 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக படிக்கல், ஜோஸ் பட்லர் களமிறங்கினர். படிக்கல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடக்கத்தில் விக்கெட் இழந்தாலும் ஜோஸ் பட்லர் அதிரடி குறையவில்லை. குஜராத் அணியின் பந்துவீச்சை அவர் துவம்சம் செய்தார். அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் அரை சதம் அடித்த பட்லர், 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த வீர்ரகள் நிலைத்து நின்று ஆடாததால் ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.