மத்திய அரசு பூஸ்டர் தடுப்பூசிகளை எப்போது போடத்தொடங்கும்? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

covid

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்படாத நிலையில் மத்திய அரசு பூஸ்டர் தடுப்பூசிகளை எப்போது போடத்தொடங்கும்? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். தடுப்பூசி தொடர்பாக ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 

அந்த பதிவில் தற்போதுள்ள வேகத்தில் தடுப்பூசி செலுத்தினால் டிசம்பர் மாத இறுதிக்குள் 42 சதவீத மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரு நாளைக்கு 6.1 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில் சராசரியாக ஒரு நாளைக்கு 58 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகிறது என்றும் அந்த பதிவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் இது குறித்து மத்திய அரசின் கொரோனா பணிக்குழுவின் தலைவர் டாக்டர் விகே பால் கூறுகையில், பூஸ்டர் தடுப்பூசி குறித்த முடிவு அறிவியல்பூர்வ முடிவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். தடுப்பூசியின் தேவை, செலுத்தப்படும் காலம், பூஸ்டரின் தன்மை ஆகியவை அறிவியல் பூர்வமான முடிவுகளின் அடிப்படையில் அமையும் என சுகாதாரத்துறை மந்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்திருப்பதாகவும் டாக்டர் வி.கே.பால் குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து கொரோனா தாக்கம் ஆரம்ப கட்டங்களில் லேசான அறிகுறிகளுடன் வருவதால் அதன் வடிவத்தில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என நிபுணர்கள் கவனித்து வருவதாகவும் அவர் கூறினார். இரண்டு டோஸ் தடுப்பூசி மூலம் கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி 3-6 மாதங்களுக்குப் பிறகு குறைவதால் ஒரு பூஸ்டர் அவசியம் என்று டெல்லி ஐ.எல்.பி.எஸ். மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சரின் தெரிவித்துள்ளார். 

மேலும் மூன்றாவது டோஸ் அல்லது பூஸ்டர் செலுத்தப்பட்டால், கடுமையான தொற்று மற்றும் மருத்துவமனையில் சேர்க்கவேண்டிய ஆபத்து குறையும் என்றும் அவர்  குறிப்பிட்டார். குறிப்பாக, ஒமைக்ரான் தொற்று பரவி வருவதால் முன்களப் பணியாளர்கள் முதலில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் சரின் வலியுறுத்தி உள்ளார்.