“காற்றுமாசு காரணமாக, இந்தியார்களின் ஆயுட்காலம் குறைந்து வருவதாக” சர்வதேச பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியர்கள் பற்றியும், இந்திய நிலங்கள் பற்றியும், அவ்வப்போது தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தான், தற்போது புதிய ஆய்வு ஒன்றை அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கொள்கை நிறுவனம் ஒன்று தற்போது வெளியிட்டு உள்ளது.

இது குறித்து,  சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கொள்கை நிறுவனம் மேற்கொண்ட ஆய்வானது, “காற்றின் தரம் மனித வாழ்வு, ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம்” தொடர்பாக ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டு, இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் தற்போது வெளியிட்டு உள்ளது. 

அந்த ஆய்வு அறிக்கையில், “இந்தியாவின் கங்கை சமவெளி பகுதி தான், உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதி என்பது தெரிய வந்துள்ளதாக” குறிப்பிடப்பட்டு உள்ளது. 

“பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரை நீளும் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள், அங்குள்ள மாசு காரணமாக தங்கள் வாழ்நாளில் சராசரியாக 7.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உருவாகி உள்ளதாக” அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், “அதிக மாசு கொண்ட நாடுகளில் வங்கதேசத்திற்கு அடுத்தபடியாக இந்தியா 2 வது இடத்தில் உள்ளது என்றும், காற்று மாசுக்கு தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது” என்றும், அதில் கூறப்பட்டு உள்ளது.

“கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கோவிட் லாக்டவுன் கடுமையாக அமல்படுத்தப்பட்டது என்றும், அப்போது பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையிலும், நாட்டின் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது என்றும், இந்த காற்று மாசு கருவில் வளரும் சிசு தொடங்கி அனைவருக்கும் சுகாதாரக் கேட்டை விளைவிக்கும்” என்று, அந்த ஆய்வறிக்கையில் மிகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக, “இதே நிலை நீட்டித்தால், இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 வயது வரை குறையும்” என்றும், வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “உலக அளவில் நிலவும் காற்று மாசுவை பார்க்கும் போது, மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 2.2 ஆண்டுகள் குறையும் என்றும், காற்று மாசுவின் அதிக பாதிப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய தெற்காசிய நாடுகளில் தான் காணப்படுகிறது” என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும், “கடந்த 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் சராசரி காற்று மாசு ஆண்டுக்கு 61.4 சதவீதம் அதிகரித்து உள்ளது என்றும், சர்வதேச ஒப்பீடுகளை கணக்கில் கொள்ளும் போது, இந்தியாவின் அதிக மக்கள் தொகையும் காற்று மாசு அதிக அளவில் ஏற்பட காரணம்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 “உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின் படி இந்தியாவில் டெல்லி, பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் தான் மிக மோசமான காற்று மாசு பிரச்னை இருப்பதாகவும்” அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

மிக முக்கியமாக, “தற்போதை நிலை தொடர்ந்தால், டெல்லி மக்களின் ஆயுட்காலம் 10.1 ஆண்டுகளும், உத்தரப் பிரதேச மக்களின் ஆயுட்காலம் 8.9 ஆண்டுகளும், பீகார் மக்களின் ஆயுட்காலம் 7.9 ஆண்டுகளும் குறையும்” என்றும், அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.