மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, நேற்று டெல்லியில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்திக்கு ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்தார்.

சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.  இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்தியாவில் எண்ணெய் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த 137 நாட்களாக ஒரே விலையில் நீடித்த பெட்ரோல், டீசல் கடந்த  மார்ச் 22-ம் தேதி அதிகரித்தது. அதன்படி, கடந்த 22-ம் தேதி  ஒருலிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 16 காசுகளுக்கும், டீசல் 92 ரூபாய் 19 காசுகளுக்கும் விற்கப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இடையில் ஒரு சில நாட்கள் மட்டும் தவிர்த்து ஏனைய அனைத்து நாட்களும் எரிபொருள் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் கடந்த வாரம் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 38 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109.34க்கு விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் விலையும் லிட்டருக்கு 38 காசுகள் உயர்ந்து ரூ.99.42க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த 14 நாட்களில்  பெட்ரோல் ரூ.7.94, டீசல் ரூ.7.99 அதிகரித்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் தொடர்ந்து விலையேறிவருவதால், அத்தியாவாசிய பொருட்களின் விலையும் தங்களின் பயண செலவும் ஒருசேர அதிகரிப்பதாக மக்கள் வேதனையுடன் கூறி வருவதை பார்க்க முடிந்தது.

இந்நிலையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, நேற்று டெல்லியில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்திக்கு ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்தார். கவுகாத்தியை அடைந்தவுடன், பயணிகள் கீழே இறங்க தொடங்கினர். அப்போது முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஸ்மிரிதி இரானியிடம் அதே விமானத்தில் பயணித்த, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயல் தலைவர் நேட்டா டிசவுசா வந்தார்.

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயல் தலைவர் நேட்டா டிசவுசா, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு குறித்து இரானியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்மிரிதி இரானி, ‘‘வழியை மறிக்காதீர்கள். பின்னால் உள்ள பயணிகள் இறங்க வேண்டியுள்ளது’’ என்று அவரை பார்த்து தெரிவித்தார்.

மேலும் அதன் பின்பு விமானத்தை விட்டு இறங்கிக் கொண்டிருந்தபோது, நேட்டோ டிசவுசாவிடம் பேசிய ஸ்மிரிதி இரானி, ‘‘கொரோனா காலத்தில் 80 கோடி ஏழைகளுக்கு 27 மாதங்களாக இலவச உணவு தானியம் கொடுத்தோம். நீங்கள் என்னை முற்றுகையிடாமல் இருந்தால் நன்றாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பதிலளித்த நேட்டா டிசவுசா யாரையும் முற்றுகையிடவில்லை. நீங்கள் ஒரு மந்திரி என்று தெரிவித்தார். உடனே இரானி, ‘‘நான் பதில் சொல்கிறேன் மேடம்’’ என்று கூறிவிட்டு, இலவச தடுப்பூசி பற்றி பேசத் தொடங்கினார். மேலும் இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்த தனியார் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, ஒரு தனியார் செய்தி சேனல் ஆசிரியரை சூழ்ந்துகொண்டு திட்டிய குணால் காம்ரா என்ற காமெடி நடிகருக்கு, அந்த விமான நிர்வாகம் 6 மாதம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.