பாலியல் குற்றங்கள் என்பது, உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் க்கொடூரமாக நடந்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் அரசும் என்னென்னவோ முயற்சிகள் மேற்கொண்டுவரும் சூழலிலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை.

இந்தியாவை பொறுத்தவரை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக போக்ஸோ சட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது.

உலக நாடுகள் ஒவ்வொன்றும், தன்னுடைய முடிவை ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் கடுமையாக்கவே பிரயத்தனப்படுகின்றன. அந்த வகையில், பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்கவும் பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. 

பாகிஸ்தானில் கற்பழிப்பு வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.  அதன் ஒருபகுதியாக, குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டது. மேலும் காவல்துறையில் பெண்களை அதிக அளவில் சேர்ப்பது, கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பது, சாட்சிகளின் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் இந்த வரைவு சட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்று சில மந்திரிகள் பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

பல்வேறு பரிந்துரைகள் கூறப்பட்டு வந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு ரசாயண முறையில் ஆண்மை நீக்கம் செயவதற்கும் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாகக் கண்காணிப்பதற்கும் கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன

பாகிஸ்தானின் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் சட்ட அமைச்சகம் பலாத்காரத்திற்கான திருத்தங்களுடன் கூடிய வரைவை முன்வைத்தது என்றும் ஜியோ டிவி செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான அவசர சட்ட வரைவை அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்தபோது, இந்த கடுமையான தண்டனை குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

ஆண்மை நீக்க தண்டனை ஒரு தொடக்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அந்நாட்டின் ஆளுங்கட்சி செனட்டர் பைசல் ஜாவேத் கான், விரைவில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என கூறி உள்ளார்.

``குடிமக்களுக்கு பாதுகாப்பான சூழலை நாங்கள் உருவாக்க உறுதிபடுத்த வேண்டும்" என்று இம்ரான் கான் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்தே இந்த சட்டம் இயற்றப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது. இந்தக் கூற்றை அடிப்படையாக வைத்தே, பாலியல் குற்றங்களில் முடிவெடுப்பதற்கு இனியும் தாமதிக்கக்கூடாது என அரசு அதிகம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.