திமுகவை விமர்சித்த நட்டாவுக்கு ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி கண்டனம்

திமுகவை விமர்சித்த நட்டாவுக்கு ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி கண்டனம் - Daily news


தமிழக பாஜக நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்திய ஜே.பி.நட்டா நாட்டு நலனுக்கு எதிரானவர்களுக்கு திமுக தான் புகலிடம் எனக் கூறியிருந்தார். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அதில், 

``தமிழக பா.ஜ.க.,வின் செயற்குழுக் கூட்டத்தை காணொலி வாயிலாக நடத்திய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள், தங்கள் சொந்தக் கட்சிக்கான ஆக்கபூர்வ ஆலோசனைகளை வழங்குவதை விடுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தேவையின்றி சீண்டியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு முன்பு, தமிழக பா.ஜ.க.,வின் நிர்வாகக் கூட்டத்தில் பேசிய திரு.முரளிதர் ராவ் அவர்களும் தி.மு.க.,வை விமர்சித்துப் பேசியதுடன், ஜனநாயக மாண்புகளுக்குப் புறம்பாக, "மு.க.ஸ்டாலினை முதல்வராக விடமாட்டோம்" எனத் தனிப்பட்ட முறையில் என்னைக் குறி வைத்துப் பேசியதையும் இங்கே நினைவூட்டிட விரும்புகிறேன்.

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற ஆணவத்தில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஜனநாயகத்தை சிறைப்படுத்தி வரும் பா.ஜ.க. தமிழ்நாட்டில் தங்களுக்குத் தலையாட்டுகின்ற பொம்மை ஆட்சியாளர்களாக அ.தி.மு.க. அரசு இருப்பதால், அதன் முதுகில் ஏறி சவாரி செய்துகொண்டு, தி.மு.க.,வை நோக்கி தேவையற்ற விமர்சனங்களை வைக்கிறது.

தி.மு.க. என்பது ஜனநாயக இயக்கம்; வளர்ச்சியிலும், தேச உணர்வுகளிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, பாடுபட்டுவரும் இயக்கம். ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாத்து - மக்களின் அடிப்படை சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவே எமர்ஜென்சியை எதிர்த்து நின்று ஆட்சியையே விலையாகக் கொடுத்த இயக்கம். ‘மிசா' சிறைக் கொட்டடியில் தியாகத் தழும்புகளை ஏந்திய தீரர்களாம் தொண்டர்களைக் கொண்ட மக்கள் இயக்கம். இன்றைக்கு மத்திய பா.ஜ.க. அரசில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போன்ற நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்தியாவின் பன்முகத்தன்மை சிதைக்கப்படுகிறது. அவரவர் தாய்மொழி மீது ஆதிக்க மொழியைத் திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமூகநீதிக் கொள்கையைத் தகர்த்திடத் திட்டமிடப்படுகிறது. ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுக்கும் அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சமூக செயற்பாட்டாளர்கள், கருத்துரிமை போற்றும் சிந்தனையாளர்கள் - எழுத்தாளர்கள் மீது கொடூரச் சட்டங்களின்கீழ் வழக்குகள் போடப்பட்டுச் சிறைப்படுத்தப்படுகிறார்கள்.

உண்மைகளை உரக்கச் சொல்லி, உரிமைகளை வலியுறுத்தினால் அவர்களை ‘ஆன்ட்டி இண்டியன்' என்றும் ‘தேசவிரோதிகள்' என்றும் முத்திரை குத்தும் மலிவான போக்கை பா.ஜ.க.,வின் சில தலைவர்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். அதன் தேசியத் தலைவர் நட்டாவும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை, தன் வாயால் நிரூபித்திருக்கிறார்.

பா.ஜ.க. தலைவர்களிலேயே மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்பட்டவரான அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், குறைந்தபட்சப் பொதுச் செயல்திட்டத்தின் அடிப்படையில் தி.மு.கழகம் பங்கேற்றிருந்தபோதுதான், தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக விளங்கிய மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்கள் உலக வர்த்தகம் தொடர்பான தோகா மாநாட்டில் பங்கேற்று, வல்லரசு வல்லூறுகளின் பிடியில் இந்தியா போன்ற வளரும் நாடுகள் சிக்காத வகையில் ஒப்பந்தங்களை உருவாக்கினார் என்கிற வரலாற்று ஏட்டின் பக்கங்களை நட்டா போன்றவர்கள் ஒருமுறை புரட்டிப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆள்பிடிக்கும் அரசியலைத் தமிழ்நாட்டிலும் நடத்த முயற்சிக்கும் பாரதீய ஜனதா கட்சிதான், தமிழகத்தின் பண்பாட்டிற்கும் - இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கும் - ஜனநாயக மாண்புகளுக்கும் - நாட்டின் அரசியல் சட்டத்திற்கும் ஒரே எதிரியாகத் திகழ்கிறது என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்று கடுமையாக கூறியிருந்தார். 

இதைத்தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் தன் தரப்பு கண்டனங்களை தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

``தமிழக பாஜ மாநில செயற்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற போது, தேசியதலைவர் ஜே.பி. நட்டா தமிழக வளர்ச்சிக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தடையாக இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். எந்தெந்த வகையில் தடையாக இருப்பது என்பது குறித்து ஆதாரத்துடன் கூறாமல் குற்றச்சாட்டை பொத்தாம் பொதுவாக சுமத்தியிருக்கிறார். கடந்த 6 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சியில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதால் தான் பாஜவுக்கு எதிராக மக்களிடையே கடும் எதிர்ப்பு உணர்ச்சி கொந்தளிப்பான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே பாஜக செல்வாக்கு இழந்த முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.

இதைச் சகித்துக் கொள்ள முடியாத ஜே.பி. நட்டா, ஆத்திரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியிருக்கிறார். சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை-2020 ஆங்கிலத்திலும், இந்தியிலும் வெளியிடப்பட்ட நிலையில் அதை தமிழில் வெளியிட வேண்டும் என்பதற்குக் கூட, நீதிமன்றத்தில் போராடி உரிமையை பெற வேண்டியிருக்கிறது. சூழலியல் அறிக்கை குறித்து கருத்துக் கேட்பதற்கு அதைத் தமிழில் வெளியிட வேண்டும் என்கிற குறைந்தபட்ச நியாயமான அணுகுமுறை கூட பாஜக அரசிடம் இல்லை. எனவே, தமிழக மக்களால் வெறுக்கப்படுகிற கட்சியாக பாஜக இருக்கும் நிலையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை விமர்சனம் செய்வதற்கு தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவிற்கு எந்த உரிமையும் இல்லை" 

Leave a Comment