விநோதமான காரணத்துக்காக ரூ.59 ஆயிரம் கோடியை தானமாக வழங்கிய தொழிலதிபர்!

விநோதமான காரணத்துக்காக ரூ.59 ஆயிரம் கோடியை தானமாக வழங்கிய தொழிலதிபர்!  - Daily news

பிறப்பு எப்படி ஆனதாக இருந்தாலும், இறப்பு மட்டும் ஊர் போற்றும் வகையில் இருக்க வேண்டும் என்பார்கள். பலர் பணம் சம்பபாதிப்பதன் மூலம், அந்த சிறப்பு கிடைக்கும் என்பார்கள். ஆனால், வாழ்க்கையை உணர்ந்த வெகு சிலர் மட்டுமே சக மனிதனுக்கு உதவுவதன் மூலம் அந்த நிலை நமக்கு கிடைக்கும் என்ற உண்மையை உணர்கின்றன. அந்த வகையில் தான் அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், பல ஆண்டுகளாக பிறருக்கு உதவி வருகிறார்.
               
89 வயதான சார்லஸ் சக் ஃபீனி,1960 ஆம் ஆண்டு ராபர்ட் மில்லர் என்பவருடன் இணைந்து டூட்டி ஃப்ரீ ஷாப்பர் எனும் கடைகளைத் திறந்தார். தொடர் உழைப்பின் பலனாக பல நாடுகளில் தங்களது வணிகத்தை விரிவு செய்த இவர்கள் அமெரிக்காவின் முக்கிய பணக்காரர்களாகவும் உருவெடுத்தனர். ஆரம்பகாலகட்டம் முதலே சகமனிதர்களுக்கு உதவுவதில் ஆர்வம் கொண்டிருந்த ஃபீனி, மிகப்பெரிய அளவிலான தொகையை அறக்கட்டளைகளுக்கு வழங்கி வந்தார். மேலும், தான் இறக்கும் போது ஏழையாக இருக்க விரும்புவதாகவும் ஃபீனி தெரிவித்திருந்தார்.

இவர் இதுவரை குழந்தைகளின் கல்விக்கு மட்டும் சுமார் 3.7 பில்லியன் டாலரை நன்கொடையாகக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அல்மா மேட்டர் கார்னலுக்கு கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் மற்றும் வியட்நாமில் சுகாதாரத்தை மேம்படுத்த 270 மில்லியன் டாலர் எனப் பல உலக நாடுகளுக்கும் அளவு பார்க்காமல் அள்ளிக் கொடுத்து தாராளமாக உதவி உள்ளார்.

பிற பெரும் பணக்காரர்காளான பில்கேட்ஸ், வாரென் ஃபபெட் உள்ளிட்ட பல கோடீஸ்வரர்களுக்கும் தானமளிப்பதில் முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர் ஃபீனி. 40 ஆண்டுகாலமாக நன்கொடை வழங்கி வந்த இவர், ஏழையாக இறக்க வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், தனக்கு சொந்தமான 58,888 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பல்வேறு அறக்கட்டளைகள் வழியாக ஏழை மக்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டும் தனக்காகவும் தனது மனைவிக்காகவும் வைத்துக்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், சான்பிரான் சிஸ்கோ நகரில் உள்ள ஒரு சிறிய வீட்டில், தனது மனைவியுடன் குடியேறியுள்ளார். இந்த நன்கொடைகள் பற்றி பேசியுள்ள அவர், "நாங்கள் நிறையக் கற்றுக்கொண்டோம். நாங்கள் சில விஷயங்களை வித்தியாசமாக செய்தோம். ஆனால் இதனால் நான் மிகவும் திருப்தி அடைகிறேன். எனது காலகட்டத்திலேயே இதைசெய்து முடிப்பதைப் பற்றி நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். இந்த பயணத்தில் எங்களுடன் இணைந்த அனைவருக்கும் எனது நன்றி. வாழும்போது கொடுப்பதை பற்றி யோசிப்பவர்கள் அனைவரும் இதை முயலவும், நீங்கள் கண்டிப்பாக இதனை விரும்புவீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

`பிறக்கும் போது ஏழையாக பிறப்பது நம்மோட தப்பில்லை, இறக்கும் போது ஏழையாக இறப்பது நம் தவறு' என்று பஞ்ச் டயலாக் நம் ஹீரோக்களுக்கு மத்தியில், இறக்கும் போது நான் ஏழையாகவே இறக்க விரும்புகிறேன் என்ற இந்த பணக்காரரின் செயல், மிகவும் அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இவர் நமக்கு சொல்வதெல்லாம், மகிழ்ச்சியென்பது நம் எண்ணத்தில் இருப்பதுதானே தவிர, பணத்தில் அல்ல!

Leave a Comment