இந்தியாவிலேயே முதன் முறையாக, தன்னை தானே திருமண செய்து கொள்ளும் இந்திய பெண் ஒருவர், தன்னந் தனியாக கோவாவுக்கு ஹனிமூனுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஷாமா பிந்து என்ற பெண், அங்குள்ள எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி படித்து, பட்டம் பெற்றிருக்கிறார்.

இதனையடுத்து, அவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், சக இந்திய பெண்களைப் போலவே, இந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திக்கிறார். 

அதன் படி, வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள திருமணத்திற்காக இவர் தயாராகி வருகிறார். 

அத்துடன், தனது திருமணத்திற்காக, அந்த பெண் பிரேத்யேக ஆடை உள்ளிட்ட அனைத்து சம்பிராதாயங்களையும் முறைப்படி ஏற்று உள்ளார். 

ஆனால், வழக்கத்திற்கு மாறாக ஒரே ஒரு விசயம் மட்டும் இவர் திருமணத்தில் கிடையாது. அது வேறொன்று இல்லை. தாலி கட்ட மணமகன் மட்டும் இவரது திருமணத்தில் இல்லை. ஆனால், இந்த பெண்ணின் திருமணத்தில் பங்கேற்க அப்பகுதியில் உள்ள ஊர் மக்கள் மற்றும் அவரது உறவினர்களுக்குமு் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

அதாவது, அந்த இளம் பெண், தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

இப்படியாக, இளம் பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.

இந்த திருமணம் பற்றி மனம் திறந்து பேசிய அந்த இளம் பெண் ஷாமா பிந்து, “சிறு வயதில் இருந்தே திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைத்தேன். ஆனால், திருமணம் எனும் பாரம்பரியம் என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும்,  நான் ஒரு மணமகளாக வேண்டும் என விரும்பினேன். அதனால் தான், நான் என்னையே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன்” என்று, விளக்கம் அளித்து உள்ளார்.

“நம் நாட்டில் சுய அன்புக்கு ஒரு முன் மாதிரியாக நான் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். சுய திருமணம் என்பது தனக்காக நிபந்தனையற்ற அன்பு என்றும், இது சுயமாக ஏற்றுக்கொள்ளும் செயலும் கூட” என்றும், அவர் விளக்கம் அளித்து உள்ளார். 

“பொது மக்கள் விரும்பிய ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள். நான் என்னை நேசிக்கிறேன். அதனால், என்னையே நான் திருமணம் செய்து கொள்கிறேன்” என்றும், அந்த இளம் பெண் கூறியுள்ளார்.

மேலும், “பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் இந்த திருமணத்தில், மந்திரங்கள் ஓத, மணமகள் அலங்காரம் உள்ளிட்ட  வழக்கமான திருமண சம்பிரதாயங்கள் பின்பற்றப்படும் என்றும், திருமணம் முடிந்ததும் நான் தேனிலவு கொண்டாட தன்னந் தனியாக கோவா செல்ல இருக்கிறேன்” என்றும்,  ஷாமா பிந்து தெரிவித்து உள்ளார். இந்த செய்தி, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.