“எங்கள் உயிரே போனாலும் போராட்டத்தை கை விடமாட்டோம் என்றும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் 27 ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்” என்றும், விவசாயிகள் அறிவித்துள்ளனர்

பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய இந்திய விவசாயிகளின் போராட்டம் கடந்த 9 மாதங்களா நடைபெற்று வருகிறது. 

கடந்த 9 மாதங்களாக உத்தரப் பிரதேசம், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள், டெல்லி எல்லையை முற்றுகையிட்டு 250 நாட்களைக் கடந்து, 300 நாட்களை நோக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசுடன் இது வரை பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும், தோல்வியில் முடிந்தபோனதால்,  விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு துளியும் இறங்கி வரவில்லை என்றே விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில், விவசாயிகளின் அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக, உத்தரப் பிரதேசத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று ஏற்கனவே விவசாய சங்கங்கள் கூறிய நிலையில், சம்யுக்தா கிசான் மோர்சா சங்கம் ஏற்பாடு செய்த கிசான் மகா பஞ்சாயத்து என்ற பெயரில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில்  நடைபெற்றது.

இதில், உத்திரப் பிரதேசம், அரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களைச் சேர்ந்த 300 விவசாய சங்கங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். 

போராட்டத்தில் பங்கேற்க பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் டிராக்டர், கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் படையெடுத்து வந்தனர். இதனால், அந்த பகுதி ழுமுவதும் சாலையெங்கும் மக்கள் தலைகளே வெள்ளம் போல் காட்சி அளித்தன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் முசாபர்நகர் குவிந்ததைத் தொடர்ந்து, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகை, “எங்கள் உயிரே போனாலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லையில் நடக்கும் போராட்டத்தை நாங்கள் கை விடமாட்டோம்” என்று, திட்டவட்டமாக கூறினார்.

அத்துடன், “இன்னும் எத்தனை மாதங்கள் ஆனாலும் எங்கள் கோரிக்கை நிறைவேறாமல் போராட்டத்த களத்தை விட்டு நாங்கள் துளியும் நகர மாட்டோம்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

“சுதந்திர போராட்டம் 90 ஆண்டுகள் தொடர்ந்தது என்றும், ஆகவே இந்த போராட்டம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எனக்கு தெரியாது” என்றும், அவர் பேசினார்.

குறிப்பாக, “நாடு விற்கப்படுவதை நாம் தடுக்க வேண்டும்” என்றும், அந்த கூட்டத்தில் அவர் வெளிப்படையாகவே அறிவித்தார்.

மிக முக்கியமாக, “3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் 27 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்” என்று, விவசாய சங்கங்கள் ஒருமனதாக முடிவெடுத்து அறிவித்தனர்.

மேலும், “அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடக்க உள்ளதால், அங்கெல்லாம் பாஜவுக்கு எதிராக பிரசாரம் செய்யப் போவதாகவும்” விவசாயிகள் அறிவித்துள்ளனர். 

“விவசாயிகளின் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றா விட்டால், 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் பாஜவை எதிர்த்து பிரசாரம் செய்யப் போவதாகவும்” விவசாயிகள் பகிரங்கமாகவே  அறிவித்து உள்ளனர். இதனால், பாஜக மேலிடம் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.