மணிப்பூர் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

மணிப்பூர் சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பிரேன் சிங் ஆட்சி வெற்றி பெற்றது. வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்களுக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், 8 எம்.எல்..-க்கள் அவரது உத்தரவை மீறி சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தனர்.

மேலும் இன்று ஆறு எம்.எல்.ஏ.-க்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர். இருப்பினும் இதுவரை ராஜினாமா ஏற்கப்படவில்லை.

தனிக்கட்சியாக மெஜாரிட்டி இருந்தும் ஆட்சியமைக்க தோல்வியடைந்ததாக மாநில காங்கிரஸ் தலைவர் இபோபி சிங் மீது குற்றம்சாட்டப்பட்டது.
 
முன்னதாக, மணிப்பூர் மாநிலத்தில் 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பா.ஜ.க.வுக்கு 21 இடங்கள் கிடைத்தன. சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் ஆதரவோடு பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. முதல் மந்திரியாக பிரேன் சிங் உள்ளார்.

இந்நிலையில், ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர்ந்தனர். தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ., திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர். ஆனால் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் டெல்லி சென்று உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசினர். அதன்பின், தங்கள் முடிவை திரும்பப் பெறுவதாகவும் அரசுக்கு மறுபடியும் ஆதரவு அளிப்பதாகவும் கூறினர்.

எனினும், பா.ஜ.க. அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை  எனக்கூறி வந்த காங்கிரஸ், பா.ஜ.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது.

இதன்படி, அம்மாநில சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரென் சிங் பெரும்பான்மையை நிரூபித்தார். 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆப்சென்ட் ஆனதையடுத்து, முதல்வர் பிரேன் குரல் மூலம் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதாக வெற்றி பெற்றார் என சொல்லப்படுகிறது. இதன்மூலம், மணிப்பூரில் நிலவி வந்த அரசியல் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

முன்னதாக மத்தியபிரதேசத்தில் காங்கிரசில் இருந்து பா.ஜனதாவுக்கு முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தாவினர். இதனால் அங்கு கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த மார்ச் மாதம் பதவி விலகியது. அதையடுத்து சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா அரசு பதவி ஏற்றது.

இந்தநிலையில் மத்தியபிரதேசத்தில் காங்கிரசை சேர்ந்த குன்வார் பிரதியும்னா சிங் லோகி என்பவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை சட்டசபை சபாநாயகர் ராமேஷ்வர் சர்மா ஏற்றுக்கொண்டார். முன்னதாக அவர் மத்தியபிரதேச மாநில மூத்த பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசி இருந்தார். தற்போது அவரும் தன்னை பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துக் கொண்டார். இப்படி நாடு முழுவதும் பா.ஜ.க.வில் எம்.எல்.ஏ.க்கள் இணைவதும், அவர்களை வைத்து அந்த கட்சி ஆட்சிக்கட்டிலில் அமர்வதும் வாடிக்கையாகி வருகின்றது.