சென்னையை ஹஜ் புனித யாத்திரை புறப்பாட்டு இடமாக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என உறுதியளித்த அளித்த மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.,ஸ்டாலின் நன்றி  தெரிவித்துள்ளார்.  

இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றாக ஹஜ் பயணமும் இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் ஆண்டு தோறும் இந்தியாவில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக சென்னை, கொச்சி, ஐதராபாத் உள்ளிட்ட 21 இடங்கள் புறப்பாட்டு தலங்களாக செயல்பட்டு வந்தன. கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக  ஹஜ் பயணம் புறப்பாட்டு தலம் 21-லிருந்து 10-ஆக குறைத்து இந்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது. 34 ஆண்டுகளாக சென்னை விமான நிலையம் ஹஜ் பயணத்திற்கான புறப்பாட்டு தலமாக இருந்து வந்தது. 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பயணிகள் ஆண்டுதோறும் சென்னையில் இருந்து புனித பயணம் மேற்கொண்டு வந்தனர் இந்தநிலையில் சென்னை புறப்பாட்டு தலம் மாற்றப்பட்டதால் ஹஜ் பயணம் செய்யும் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இதனால் சென்னையை மீண்டும் ஹஜ் பயணத்திற்கான புறப்பாட்டு தலங்களாக சேர்க்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிற்கு பல முறை கடிதம் எழுதியுள்ளார். இந்தநிலையில் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  ஹஜ் பயணம் மேற்கொள்ள 2022 ஆம் ஆண்டு சென்னையை மையமாக அமைக்க வேண்டும் என கோரிக்கை கிடைக்கப்பெற்றதாக தெரிவித்துள்ளார். கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஹஜ் 2022 க்கான ஏற்பாடுகள் சிறப்பு விதிமுறைகள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள், தகுதி அளவுகோல்கள் போன்றவற்றுடன் சிறப்பு சூழ்நிலையில் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஹஜ் 2022 க்கான வழிகாட்டுதங்கள்  இந்திய ஹஜ் கமிட்டியால் வெளியிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் 2023-ம் ஆண்டு முதல் ஹஜ் பயணத்திற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்ல பரிசீலனை செய்யப்படும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனைனையடுத்து சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள பரிசீலிப்பதாக  உறுதியளித்த அளித்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறுத்து  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: எதிர்காலத்தில் எந்த சூழ்நிலையிலும் ஹஜ் பயணத்திற்கான எம்பார்கேஷன் பாயிண்டாக சென்னை  இருப்பதை  உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  முன்னதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புனித யாத்திரை மேற்கொள்ளும் இஸ்லாமியர்களின் நலனுக்காக  சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்  என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்று தற்போது மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. அத்துடன்  கொரோனா காரணமாக  நடப்பாண்டு  சென்னைக்கு பதிலாக  எர்ணாகுளத்தில் இருந்து ஹஜ் புனித யாத்திரை புறப்படும் என்றும் மத்திய அமைச்சர்  முக்தார் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.