வாக்கிங் சென்ற போது சென்னை பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் சர்ச்சை.. திருமணம் நிச்சயதார்த்தமான இளைஞர் கைது!

வாக்கிங் சென்ற போது சென்னை பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் சர்ச்சை.. திருமணம் நிச்சயதார்த்தமான இளைஞர் கைது! - Daily news

சென்னையில் வாக்கிங் சென்ற இளம் பெண்ணை மர்ம நபர்கள் சிலர் பாலியல் சீண்டல் செய்து விட்டுத் தப்பி ஓடிய நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணே நேரடியாகக் களத்தில் இறங்கி குற்றவாளிகளைத் தேடி கண்டுபிடித்த சம்பவத்தில், திருமணம்  நிச்சயதார்த்தமான நபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த ஸ்கூபா டைவிங் என்னும் ஆழ்கடல் நீச்சலில் அதிக ஆர்வம் கொண்ட 23 வயது இளம் பெண் ஒருவர், கடந்த 8 ஆம் தேதி காலை நேரத்தில், தனது நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சில மர்ம நபர்கள், இந்த பெண்ணின் அருகில் வந்ததும், திடீரென்று கீழே இறங்கி இந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். அதற்குள், இந்த பெண் சத்தம் போட்டு பொதுமக்களை உதவிக்கு அழைத்ததால், சற்று தொலைவில் சிலர் வாங்கிங் வந்துகொண்டிருப்பதைப் பார்த்து, அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதில், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், ஆன்லைன் மூலமாக எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், புகார் தொடர்பாகக் காவல் துறையினர் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை என்றும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க வில்லை என்றும் கவனித்த அந்த பெண், “நாமே குற்றவாளிகளை கண்டுபிடிக்கலாம்” என்று கருதி, களத்தில் இறங்கி உள்ளார். அதன்படி, தன்னை பாலியல் சீண்டல் செய்த நிகழ்விடத்தில் அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை, அந்த வீட்டின் உரிமையாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, குறிப்பிட்ட இருசக்கர வாகனத்தின் எண் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் பற்றிய வீடியோ காட்சிகளைப் பார்த்து அடுத்த 3 நாட்களில் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்களையும், அந்த பெண் அடையாளம் கண்டார்.

அதன் தொடர்ச்சியாக, இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் அந்த சிசிடிவி காட்சிகளைப் பகிர்ந்து, வீடியோ ஒன்றையும் பாதிக்கப்பட்ட அந்த பெண், அந்த பகுதியில் உள்ள குறிப்பிட்ட ஒரு இடத்தைக் காட்டி, “இங்கே நான் மட்டும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக வில்லை. இந்த வழியாகச் செல்லும் பல பெண்களும் இந்த இடத்தில் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் அருகிலுள்ள வீடுகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து, அந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களைத் தேடி கண்டுபிடித்திருக்கிறேன்” என்று, கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

“இப்படி அந்த நபர்கள் பிடிபட்டாலும், அடுத்து என்ன செய்யலாம்?” என்றும், அந்த பெண் கேள்வி எழுப்பி இருந்தார். அத்துடன், “இது போன்று ஆயிரக்கணக்கான பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பெண்கள் சுதந்திரமாக வெளியே வர அச்சப்படுகின்றனர்” என்றும், தனது வேதனையைப் பதிவு செய்திருந்தார். 

“இந்த நாட்டில் பெண்ணை விட பசு மாட்டிற்குப் பாதுகாப்பு அதிகமாகக் கொடுக்கிறார்கள்” என்றும், அந்த பெண் மிகவும் வேதனையுடன் அந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். இந்த வீடியோ போலீசாரின் உயர் அதிகாரிகள் கவனத்திற்குச் சென்ற நிலையில், சம்மந்தப்பட்ட பெண்ணை தொடர்புகொண்டு, அந்த பெண்ணிடம் இருந்த சிசிடிவி காட்சிகளைப் பெற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், இது குறித்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்திய நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு சம்மந்தப்பட்ட நபரை தற்போது அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த நபர், திண்டிவனத்தைச் சேர்ந்த 25 வயதான ஆதாம் அலி என்பது தெரிய வந்துள்ளது.

ஆதாம் அலி, முகலிவாக்கத்தில் தங்கி ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்து உள்ளார். அப்போது, அந்த நபரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு  அதாவது கடந்த 16 ஆம் தேதி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

விசாரணையில், “நான் விளையாட்டிற்காக அந்த பெண்ணிற்கு பாலியல் சீண்டல் செய்தேன்” என்று, அவன் கூறியதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள ஆதாம் அலிக்கு சொந்த ஊரான திண்டிவனத்தில் கடந்த 15 ஆம் தேதி வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நிச்சயதார்த்தம் நடந்த முடிந்த கையோடு அவர் சென்னைக்கு வேலைக்கு வந்துள்ளார். அப்படி சென்னைக்கு வந்த அந்த நபரை, மாங்காடு போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது சிறையில் அடைத்து உள்ளனர். 

இதனிடையே, சென்னையில் இளம் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த நபர், வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட மறுநாளே கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment