கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சில விதிகளை பின்பற்றுமாறு மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசாங்கங்கள் பலமுறை அறிவுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் கூட நாடு முழுவதும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி கட்டாயம் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நியூயார்க் பல்கலைக்கழகம் மற்றும் யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு குறித்த தகவல் தற்போது வெளியிடப்பட்டது. அதில், ஆண்களை விட பெண்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் மற்றும் சுகாதாரத்தை பராமரித்தல் போன்ற கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் பெண்கள் கொரோனா வைரஸ் விவகாரத்தில் நிபுணர்களின் பேச்சை கேட்பதற்கும், எச்சரிக்கை மற்றும் பதற்றத்தை வெளிப்படுத்துவதற்கும் அதிக வாய்ப்புள்ளது என்பதும் கண்டறியப்பட்டது.

இதேபோல, உளவியல் துறையின் போஸ்ட்டாக்டோரல் ஆராய்ச்சியாளரும், ஆய்வறிக்கையின் முதன்மை ஆசிரியருமான இர்மக் ஓல்காய்சோ ஒக்டன் என்பவர், தொற்றுநோய்க்கு முந்தைய காலகட்டங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி மருத்துவர்களை சந்திப்பதாகவும், ஆண்களை காட்டிலும் மருத்துவர்களின் பரிந்துரைகளைப் பெண்கள் பின்பற்றுவதாகவும் காட்டியது என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் இந்த சமீபத்திய ஆய்வு மருத்துவ கவனிப்பை நோக்கிய பெண்களின் நடத்தைகளின் பிரதிபலிப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மற்றவர்களின் உடல்நலம் தொடர்பான தேவைகளிலும் பெண்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். எனவே, தொற்றுநோய் பரவாமல் தடுக்க பெண்கள் சார்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் நல்ல தரமான முயற்சிகளாக கருதப்படும் என்பதில் ஆச்சரியமில்லை என குறிப்பிட்டுள்ளார். முகக்கவசம் அணியும்படி கேட்டுக் கொண்ட பல்வேறு பகுதிகளில் சில ஆண்கள் எப்படி ஆவேசமாக நடந்து கொண்டார்கள் என்பதை பல வீடியோக்களும், அறிக்கைகளும் சுட்டிக்காட்டியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ போன்ற ஒரு சில உலகத் தலைவர்கள் இந்த வைரஸின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்டு பேசியுள்ளனர்.

அதேசமயம் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தற்போது நடத்தப்பட்ட ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட 800 அமெரிக்க குடியிருப்பாளர்களிடம் கேள்வி கேட்டுள்ளனர். அதில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் அவர்களின் போக்கு என்ன மற்றும் வீட்டில் தங்குதல், அடிக்கடி கை கழுவுதல், குடும்பம் அல்லது நண்பர்களுடன் நேரில் தொடர்பு கொள்ளும் நாட்கள் மற்றும் மற்றவர்களுடன் நேரில் தொடர்பு கொள்ளும் நாட்களின் எண்ணிக்கை குறித்து கேட்கப்பட்டது.

கடந்த மார்ச் 9 முதல் மே 29 வரை, ஏறக்குறைய 3,000 அமெரிக்க மாவட்டங்களிலிருந்து திரட்டப்பட்ட ஜி.பி.எஸ் இருப்பிடத் தரவுகள், 15 மில்லியன் ஜி.பி.எஸ் ஸ்மார்ட் போன் ஒருங்கிணைப்புகள் ஆகியவற்றை அவர்கள் பகுப்பாய்வு செய்தனர். இந்த காலகட்டத்தில், தொற்றுநோய் பரவல் அதிகரித்திருந்தது. அதற்கு காரணம், அதிக சதவீத ஆண்களை கொண்ட மாவட்டங்களில் உள்ள தனிநபர்களை ஒப்பிடும் போது குறைவான இடைவெளியை பின்பற்றுவதை அவர்கள் கண்டறிந்தனர்.

கொரோனா விதிமுறைகளை பெண்கள் தான் அதிகம் கடைபிடிப்பதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளது.