உலகம் முழுவதும் பரவி மனித குலத்திற்கே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், கடந்த வருடம் இதே நாளில் தான் (நவம்பர் 17, 2019) முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. இன்றுவரை, கொரோனா காரணமாக உலகம் முழுவதும் சுமார் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டும், 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியும் இருக்கின்றனர். கொரோனா கண்டறியப்பட்டு ஓராண்டு நிறைவாகியிருப்பதையொட்டி, நெட்டிசன்கள் பலரும் இதுகுறித்து பதிவிட்டு வருகின்றனர்.

இப்படியான சூழலில், கடந்த வருடம் கொரோனா கண்டறியப்பட்ட அந்த நாள்களில், வூகான் எப்படி இருந்தது என்பதுபற்றிய சில அதிர்ச்சியான தகவல்கள், இங்கே, உங்களுக்காக!

கடந்த வருடம், நவம்பர் இறுதியில், இதேமாதிரியான நேரத்தில், பல ஆயிரம் குடும்பங்கள் இருந்த வூகான் மாகாணத்தில் சந்தைகளுக்கு சென்று வந்தவர்கள் அனைவருக்கும், ஒரே மாதிரியான பாதிப்புகள், தொடர்ச்சியாக ஏற்பட்டன. அப்போது கொரோனா வைரஸ் கண்டறியப்படியததால், மருத்துவர்களுக்கும் எதுவும் விளங்கவில்லை. நாளாக நாளாக காய்ச்சல், மூச்சுத்திணறல், இருமல் போன்ற ஒரே மாதிரியான அறிகுறிகளோடு பலரும் மருத்துவமனையை நாடியதால், வூகான் மருத்துவர்கள் கொஞ்சம் சுதாரிக்கத்தொடங்கினர்.

இப்படி நவம்பரில் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிய பாதிப்பு, டிசம்பர் இறுதியில்தான் பரபரப்பாகவும் வேகமாகவும் பரவியது. குறிப்பாக, டிசம்பர் இறுதியில் 27 பேருக்கு ஒரே மாதிரியான அறிகுறிகள் இருந்தது, அங்கிருந்த உள்ளூர் டெக்னீஷியன்கள் மற்றும் மருத்துவர்களால் உறுதிசெய்யப்பட்டன. உறுதியானவுடன், அந்த நேரத்தில், அவர்கள் அதை அரசுக்கு தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர், சீனாவின் தென் பகுதியான வூகானை சேர்ந்தவர்கள் என்பதாலும், இந்தப் புதிய வைரஸ் ஏதோவொரு விலங்கிடமிருந்துதான் பரவுகிறது என்பதைக் கண்டறிந்தமையாலும், சீன அரசு முதற்கட்ட நடவடிக்கையாகக் கடலுக்கு அருகில் இருக்கும் சந்தைகள், மொத்த வணிகம் மேற்கொள்ளும் இடங்கள் போன்றவற்றை 'செயல்பட வேண்டாம்' என அறிவுறுத்தியது.

தேவையில்லாத பதற்றத்தைக் கிளப்ப வேண்டாம் என்று நினைத்த அரசு, `பாதிப்பு பரவும் அபாயம் இருப்பதால்தான் சந்தைகளை செயல்பட வேண்டாம் என அறிவுறுத்துகிறோம்' என்ற அடிப்படை காரணத்தைக்கூட மக்களுக்குச் சொல்லி எச்சரிக்காமல் இருந்தது. `ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் தொற்று வைரைஸ் வியாதி இது' என அப்போது அறியப்படாத காரணத்தால், அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் அரசு சார்பில் மேற்கொள்ளப்படவில்லை. விளைவு, வைரஸ் மிக வேகமாகப் பரவத்தொடங்கியது.
 
இதற்கிடையில், சீனாவின் வூகான் மாகாணத்தைச் சேர்ந்த 34 வயது கண் மருத்துவர் லீ வென்லியாங், தனது மருத்துவ நண்பர்கள் இணையக் குழுவுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை டைப் செய்து அனுப்பினார். அதில், தான் பணிபுரியும் இடத்தை (வூகானை) சுற்றிய இடங்களில், 2003-ம் ஆண்டு உலகையே அச்சுறுத்திய சார்ஸ் தொற்றுநோயின் சாயலில், புதிய வகை தொற்று நோய் ஒன்று பரவிவருவதாகக் குறிப்பிட்டார் லீ. கூடவே, `இது சார்ஸ் பாதிப்பு இல்லையென்ற போதும் இதன் தீவிரத்தன்மை மிக மோசமாக இருக்கிறது' என்றும் குறிப்பிடுகிறார். தொடர்ந்து, `மருத்துவ நண்பர்கள் அனைவரும் கவனமாக இருங்கள். உங்களிடம் வரும் காய்ச்சல், இருமல் நோயாளிகளிடம் கவனமாக இருங்கள். உங்களை நோய்த்தொற்று தாக்காமல் இருக்கும் வகையில், முன்னெச்சரிக்கையோடு செயல்படுங்கள்' என்றும் கூறியிருந்தார் லீ.

நான்கு நாள்கள் கழித்து, ஜனவரி தொடக்கத்தில், மருத்துவர் லீயை, பொய்யான செய்தியைப் பரப்பியதற்காகவும், மக்கள் மத்தியில் வீண் பதற்றத்தை உருவாக்க முயன்றதற்காகவும் கைதுசெய்ய உத்தரவிட்டது சீன அரசு. பின், `இனி இப்படி செய்யக்கூடாது' என எச்சரித்து, `மீறி செய்தால், உங்களைக் கைதுசெய்வோம்' என எச்சரித்து, `தான் கூறியது அனைத்தும் பொய்யான தகவல்கள்தாம் என்று அவரை எழுதி கையெழுத்திடவைத்து விடுதலை செய்தது அரசு. லீயைப் போலவே, வைரஸின் தாக்கம் குறித்துப் பொதுவெளியில் பேச முயன்ற 8 பேரை அந்த நேரத்தில் எச்சரித்தது சீனா.

லீ மீதான கைது நடவடிக்கைக்கு இடையில், சரியாக டிசம்பர் 31-ம் தேதி சீனாவில் உள்ள உலக சுகாதார நிறுவனக் கிளைக்கு, புது வைரஸ் வகை குறித்த தகவல்கள் சீன அரசால் தரப்பட்டுவிட்டன. அவர்கள் வைரஸ் குறித்து ஆராய்ச்சியையும், அதைத் தடுப்பதிலுள்ள தங்களின் பணியையும் அன்றே தொடங்குகின்றனர்.

லீ கைது செய்யப்பட்ட நாள்வரையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சந்தேகப் பட்டியல் எண்ணிக்கை 40 - 50 என்றே அளவிலேயே இருந்திருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக, வைரஸ் அதிகமாகப் பரவி, ஜனவரி தொடக்கத்தில் எண்ணிக்கை நூற்றைத் தாண்டியது. இதற்குப் பிறகுதான், சீனாவின் சுகாதார அதிகாரிகளுக்கு ஏதோ தவறாக இருக்கிறதெனப் புரிந்தது.

சந்தைகள் மூடப்பட்ட பின்னரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை வைத்து, இந்த நோய், தொற்றுவகையைச் சேர்ந்தது (ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும்) என்பதை அவர்கள் யூகிக்கிறார்கள். ஆனால் அப்போதும், மக்கள் மத்தியில் அதுகுறித்து விழிப்புஉணர்வு எதுவும் தரப்படவில்லை.

`இந்தப் புதிய வைரஸ், 70 சதவிகிதத்துக்கும் மேல் சார்ஸ் வகை கொரோனா வைரஸ் போலவே இருக்கிறது' என்ற தகவல், சீனா முழுக்கப் பரவுகிறது. மக்கள் அனைவரும், இதை சார்ஸ் என நினைத்து அஞ்சத் தொடங்குகின்றனர். `இது சார்ஸ் இல்லை. எதுவென விரைவில் கண்டறிந்து சொல்கிறோம்' எனக் கூறிவிட்டு, மீண்டும் அமைதியாகிவிட்டது சீன அரசு.

உலக நாடுகள் இங்குதான் விழிக்கத் தொடங்கின. 'வூகானிலிருந்து பயணப்பட்ட மக்கள், மற்றும் நிமோனியா அறிகுறி தெரியவருபவர்கள் மருத்துவ உதவியை நாடவும் (ஜனவரி 8)' என்ற அறிக்கையை உலகளாவிய அளவில் வெளியிட்டு அலெர்ட் செய்தது அமெரிக்க நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மையம். அப்போதும் சீனா, `இது என்ன வகை வைரஸ் எனக் கண்டறியும் முயற்சியில் ஈடுபடுகிறோம்', `விலங்குகளிடமிருந்து பரவுவதாகத் தெரிகிறது. ஆகவே சந்தைகள் யாவும் மூடப்பட்டுவிட்டன' போன்ற அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு மௌனம் காத்தது. 200 பேர் பாதிக்கப்படும் வரையில், வான்வழி - தரைவழி பயணம் தொடர்பான எந்த வரையறைகளும் சீனா சார்பில் மேற்கொள்ளப்படாமல் இருந்துள்ளது.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 221 என்றான போது, மக்கள் மத்தியில் `இது ஒரு தொற்றுநோய்' என்ற அறிவிப்பு விடப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக விழித்த அரசு, இதற்குப் பிறகுதான் வூகானைச் சுற்றியுள்ள மாகாணங்களை அலெர்ட் செய்தது. மூன்று புதிய அவசர நிலை மருத்துவமனைகளை உருவாக்கியது. மக்களை, 'பொதுவெளியில் நடமாட வேண்டாம்' என்று அப்போதுதான் அறிவுறுத்தியது.

தொடர் ஆராய்ச்சிக்குப் பின், ஜனவரி மாதம் 20-ம் தேதியன்று, இது `நாவல் வகை கொரோனா வைரஸ்' என அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். அவர்கள் அறிவித்தபோது, ஒரே நேரத்தில் 282 பேர் நோயாளிகளாக உறுதிசெய்யப்பட்டனர்.

அவர்களில் 51 பேர் பாதிப்பின் மோசமான நிலையிலும், 12 பேர் காப்பாற்றுவதே கடினம் என்ற நிலையிலும் இருந்தனர். அன்றைய தினம், ஆறு உயிரிழப்புகளும் வூகானில் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இடைப்பட்ட காலத்தில் (டிசம்பர் இறுதி - ஜனவரி தொடக்கம் வரையிலான காலம்) பயணத்துக்கான கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாததால், வூகானிலிருந்து பயணம் மேற்கொண்ட 40,000க்கும் மேற்பட்டோர் அவரவர்களின் நாடுகளில் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டனர். இருப்பினும், அந்த 40,000 பேரையும், அவர்களோடு தொடர்பிலிருந்தவர்களையும் தனிமைப்படுத்த பல நாட்டின் அரசுகள் தவறின. இப்படி சூழலை கையாளாத நாடுகள் அனைத்தும், இன்று தவித்து வருகிறது. அந்தப் பட்டியலில், இந்தியா - பிரேசில் போன்ற நாடுகள் முன்னணியில் இருப்ப்பவை!

பிரச்னை தீவிரமான பிறகுதான், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் பரிசோதனைக் கூடங்கள், பரிசோதனைக் கருவிகள் யாவும் அதிகளவில் கொண்டுவரப்பட்டன. மேலும் பயணிகள் அனைவருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 'கைகழுவுங்கள், மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள்' போன்ற அறிவுரைகள் யாவும் தரப்பட்டன.

ஒருவேளை தொடக்கத்திலேயே உலக நாடுகளும், குறிப்பாக சீன அரசாங்கமும் - உலக சுகாதார நிறுவனமும் சூழலை அறிந்து, சமயோகிதமாக செயல்பட்டிருந்தால், தற்போது, பல பிரச்னைகள் தவிர்க்கப்பட்டும் - தடுக்கப்பட்டும் இருந்திருக்கும். எத்தனையோ லட்சம் உயிர்களும் காக்கப்பட்டிருக்கும்!

தவிர்க்கவே முடியாத நிலை ஏற்பட்ட பிறகே சுதாரிக்கத் தொடங்கியதாலோ என்னவோ, பல நாடுகளும் தம் மக்களுக்கு கொரோனாவோடு வாழப் பழக சொல்லி அறிவுரை சொல்லியது. காலப்போக்கில், அதுவே மக்களுக்கு பழக்கப்பட்டும் போனது. இதோ, இப்போது நாமும் அப்படி கொரோனாவோடு வாழப்பழகிக்கொண்டோம்!