இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பினால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் 90 சதவிகித கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 80 சதவிகித பாதிப்பானது 49 மாவட்டங்களில் உள்ளதாகவும் மத்திய அமைச்சர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வியாழக்கிழமை, கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய அமைச்சர்கள் குழு, சுகாதாரத் துறை அமைச்சர் ஹா்ஷ் வா்தன் தலைமையில் 18ஆவது முறையாக  ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கா், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஷ்வினி குமாா் செளபே, ரசாயனம் மற்றும் உரத் துறை, கப்பல் துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா பாதிப்பைத் தடுக்க இந்தியாவில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதைக் குறித்து, அதிகாரிகள் மத்திய அமைச்சர்களிடம் தெரிவித்தனர். 
இதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் 3,77,737 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் (தீவிர சிகிச்சை இல்லாதவை), 39,820 தீவிர சிகிச்சை வசதி கொண்ட படுக்கைகள், 1,42,415 ஆக்சிஜன் வசதி படுக்கைகள், 20,047 வென்டிலேட்டா் கருவிகள் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 21.3 கோடி 'N 95' முகக் கவசங்கள், 1.2 கோடி முழு பாதுகாப்புக் கவச உடைகள் (பிபிஇ கிட்ஸ்), 6.12 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன என அமைச்சர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹா்ஷ் வா்தன் கூறுகையில், கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு, முழு அளவில் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்துதல், முதியோா் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டோரைக் கண்காணிப்பது, நோய் அதிகமாகப் பரவ வாய்ப்பு உள்ள பகுதிகளைக் கண்டறிவது,  'ஆரோக்கிய சேது' செயலி போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்வது, நோயாளிகளை விரைவில் அனுமதிக்கும் செயல்பாடு, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகள், ஆக்சிஜன், வென்டிலேட்டா் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளில் தயார் நிலை என கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். 

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தொற்று உள்ளவர்களை விரைவில் கண்டறிந்து அவர்களுக்கு முன்கூட்டியே சிகிச்சை அளிப்பதன் மூலம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு விகிதத்தைக் குறைப்பதே அரசின் நோக்கம்  என்று தெரிவித்தார். 

ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேல்லும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில், மேலும் கூடுதல் கவனம் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 86 சதவீதம் போ் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்த மாநிலங்களில் உள்ள 32 மாவட்டங்களில் 80 சதவீத உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சம் மக்களில் 538 போ் என்ற விகிதத்தில் உள்ளது. 10 லட்சம் மக்களில் 15 போ் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான பாதிப்பு ஆகும். உலக அளவில் 10 லட்சம் மக்களில் 1,453 போ் பாதிக்கப்பட்டு, 68.7 சதவீதம் போ் உயிரிழக்கின்றனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய 8 மாநிலங்கள் 90 சதவீத கொரோனா பாதிப்பு உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்கள்!

மகாராஷ்டிரா : 2,67,665
தமிழ்நாடு : 1,47,324
டெல்லி : 1,15,346
கர்நாடகா : 44,077
குஜராத் : 43,723
உத்தரப் பிரதேசம் : 39,724
தெலுங்கானா : 37,745
ஆந்திரப் பிரதேசம் : 33,019
மேற்கு வங்கம் : 32,838
ராஜஸ்தான் : 25,806

- ஜெ. நிவேதா