பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா, தான் மூன்றாவது முறையாக செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில், தனக்கு கொரோனா நெகடிவ் என வந்துவிட்டதாக்கவும், தான் குணமடைந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். 

கொரோனாவால் உலகில் இதுவரை பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1,62,00,326 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 99,13,072 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 6,48,440 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கடுமையாகப் பாதிப்படைந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த திணறி வருகின்றன. சில நாடுகளில் ஆட்சியாளர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவும் ஒருவர்.

போல்சோனாரோவிற்கு கடந்த ஜூலை 7 ஆம் தேதியன்று முதல் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 15 ஆம் தேதி நடந்த இரண்டாவது பரிசோதனையிலும் அவருக்கு தொற்று இருப்பதாகவே தெரியவந்தது.

அப்போது தனிமைப்படுத்தல் விதிகளை அவர் முறையாக பின்பற்றாததால் கொரோனா குணமாவதற்கு தாமதம் அடைவதாக மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.

இந்நிலையில் ஜூலை 23 ம் தேதி நடைபெற்ற மூன்றாவது பரிசோதனையிலும் போல்சொனாரோவிற்கு பாசிட்டிவ் என முடிவு வெளியாகியிருந்தது.

இதையடுத்து தன் ஆதரவாளர்களை சந்தித்து, ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு விடைபெற்ற போல்சொனாரோ அடுத்த சில நாட்களுக்கு அல்வோராடா அரண்மனையில் தனிமைப்படுத்தப்படுவார் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் தான் கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார் அதிபர். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “அனைவருக்கும் வணக்கம் , கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளேன்” என்று தனது புகைப்படத்தை பதிவிட்டு தெரிவித்திருக்கிறார்.

இந்த நெகடிவ் ரிசல்ட், கடந்த இரு வாரங்களில் ஜெய்ர் போல்சனோரா செய்துக் கொண்ட நான்காவது கொரோனா பரிசோதனை இதுவாகும். கொரோனாவிலிருந்து குணமானதைத் தொடர்ந்து போல்சனோராவுக்கு அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவத்தொடங்கிய நேரத்திலிருந்தே, ``கொரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல், முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்து, முன் இருந்தது போலவே மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும்" என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா கூறிவந்தார். இப்படி கூறிவந்த அவருக்கேவும் கொரோனா ஏற்பட்டது, பல்வேறு தளங்களில் சர்ச்சைக்கு உள்ளானது. போல்சனோரின் பேச்சுக்கு, உலக சுகாதார நிறுவனமேவும் கடும் கண்டனங்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

இதே அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ, பிரேசிலின் கொரோனா தொடர்பான நடவடிக்கைகள் குறித்து நேற்று பேசும்போது, ``கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் கொல்லப்படுகிறது. வேலையின்மை மற்றும் பணம் இல்லாமையால மக்கள் இறக்கின்றனர்” என்று சில மாகாணங்களில் மற்றும் சில நகராட்சிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். `ஊரடங்கு கொல்கிறது’ என்று கூறிய அதிபர் பொல்சனாரோ, ``சில அரசியல்வாதிகள் அறிவித்துள்ள கட்டாய ஊரடங்கு நாட்டின் பொருளாதாரத்தை மூச்சுத்திணற வைக்கிறது” என்றும் குறிப்பிட்டு சர்ச்சைகளுக்கு உள்ளானார்.

என்னதான் நாட்டு மக்களுக்கு இப்படியான கருத்துக்களை சொல்லி வந்தாலும், தன் ஆதரவாளர்களை தனது இல்லத்தில் முகக்கவசங்களை அணிந்து தனிமனித இடைவெளிகளைப் பின்பற்றி சந்தித்துத்தான் பேசிவந்தார் அவர். அதேநேரம்ம், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அவர், தனது சிகிச்சைக்குப் பயன்படுத்தி வருவதாக அறிவித்தார். இந்த மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என சில நாடுகள் எச்சரிக்கை விடுத்தபோது அப்படி ஏதும் தனக்கு பாதிப்பில்லை என்றும், அது தொடர்பாகவும் அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டு வந்தது.

பிரேசிலில் இதுவரை கொரோனாவுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான பட்டியலில் இரண்டாவது இடம், பிரேசிலுக்குத்தான்.