கள்ளக்காதல் உறவால் கணவரை கொலை செய்து கிணற்றில் வீசிய மனைவி!

கள்ளக்காதல் உறவால் கணவரை கொலை செய்து கிணற்றில் வீசிய மனைவி! - Daily news

சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்து கிணற்றில் வீசிய மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மிட்டாபுதூர் பகுதியில் வசித்து வருபவர் விஜயலட்சுமி. இவரது கணவர் வெங்கடேசன் தென்னாப்பிரிக்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

வேலைக்காக கணவர் வெளிநாடு சென்றிருந்த நிலையில் விஜயலட்சுமிக்கும் அவரது தங்கை சரஸ்வதியின் கணவர் குமரனுக்கும் நெருக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்த தகவல் தென்னாப்பிரிக்காவில் இருந்த வெங்கடேசனுக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கடந்த 10-ம் தேதி அன்று சொந்த ஊர் திரும்புவதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த வெங்கடேசனை, குமரன் நேரில் சென்று அழைத்து வந்ததாகவும், அப்போது இருவரும் சேர்ந்து மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மனைவியை பார்க்க சென்ற வெங்கடேசன் அவருடன் கள்ள உறவு தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது தலையிட்ட குமரனுக்கும், வெங்கடேசனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குமரன் இரும்பு கம்பியால் தாக்கியதில் வெங்கடேசன் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சம்பவத்தை மறைப்பதற்காக குமரன் மற்றும் வெங்கடேசனின் மனைவி விஜயலட்சுமி ஆகியோர் சடலத்தில் கல்லை கட்டி மிட்டாபுதூர் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசி உள்ளனர். இருப்பினும் செய்த கொலையை உறவினர்களிடையே தொடர்ந்து மறைக்க முடியாத காரணத்தால் குமரனும் விஜயலட்சுமியும் பெரிய புதூர் கிராம நிர்வாக அலுவலரிடம் நடந்த விவரங்களைச் சொல்லி சரணடைந்தனர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் புஷ்பா, அழகாபுரம் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.

இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் சரண் அடைந்த இருவரையும் காவல்துறையினர் சம்பவ பகுதிக்கு நேரில் அழைத்துச் சென்று கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் வெங்கடேசனின் சடலத்தை மீட்டனர். மேலும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். கள்ளக்காதல் உறவால் கட்டிய கணவனை கொலை செய்து கிணற்றில் வீசிய மனைவியும் கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

Leave a Comment