குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா அவரது வயது 38. இவருக்கு சவிதா இவருக்கு வயது 35 என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு 10 வயதிற்கு உட்பட்ட மகன் மற்றும் மகள் என இரு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் ஜிதேந்திரா தனது மனைவி மற்று இரு குழந்தைகளுடன் நேற்று முன் தினம் அம்மாநிலத்தின் கன்கீர் மாவட்டத்தின் புதிய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். லாட்ஜில் தங்கிய குடும்பத்தினர் நேற்று காலை நீண்டநேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உள்பக்கமாக பூட்டி இருந்த அறையின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற பார்த்தனர். அங்கு கணவன் - மனைவி இருவரும் அறையில் உள்ள பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், இரு குழந்தைகள் எங்கே என்று தேடியுள்ளனர். அப்போது, அந்த அறையில் உள்ள படுக்கையில் குழந்தைகள் இருவரின் வாயிலும் நுரை தள்ளிய நிலையில் உயிரிழந்து கிடத்ததை கண்டு அதிர்ந்தனர்.
மேலும் அங்கு குழந்தைகள் இருவருக்கும் விஷத்தை கொடுத்துவிட்டு ஜிதேந்திரா மற்றும் அவரது மனைவி சவிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து 4 பேரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணவன் - மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.