இளைஞர்களே உஷார்.. “கால் பாய் - கால் கேர்ள் வேலைக்கு அழைக்கும் மோசடி கும்பல்!”

இளைஞர்களே உஷார்.. “கால் பாய் - கால் கேர்ள் வேலைக்கு அழைக்கும் மோசடி கும்பல்!” - Daily news

இளம் பெண்களுக்கு உதவும் வகையில், இளைஞர்களை “கால் பாய்”களாக வேலைக்கு அழைப்பது போல், அவர்களிடம் மோசடியாக பணம் பறிக்கும் மோசடி கும்பல், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக புதிய புதிய குற்றச்சாட்டுக்கள் எழுந்து உள்ளன.

மாறி வரும் 2K Kids டேஸ்ட்டுக்கு தகுந்தார் போல், இளைஞர்களின் இளம் வயது உணர்ச்சிகளை பயன்படுத்தி, அவர்களுக்கு பாலியல் ரீதியாக வேலை தருகிறோம் என்று, வித விதமாக மோசடியாக பணம் பறிக்கும் கும்பல்கள் புதிது புதிதாக இந்த டிஜிட்டல் உலகத்தில் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

அப்படிதான், பெண்களுக்கு உதவும் வகையில், “கால் பாய்” வேலை என்று, ஆசை வார்த்தையில் மயங்கிய இளைஞன் ஒருவன் தற்போது 17 லட்சம் ரூபாய் பணத்தை பறிக்கொடுத்து உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் தொழில் நுட்பம் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டிருந்தாலும், இணையத்தில் பல்வேறு வகையிலான டிசைன் டிசைனான புது புது மோசடிகளும் அன்றாடம் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றன.

அந்த வகையில், இணையத்தில், “இண்டியன் எஸ்கார்ட் சர்வீஸ்” என்ற பெயரில், செயல்பட்டு வரும் இணைய தளமானது “கால் பாய்” வேலைக்கு இளைஞர்கள் தேவை என்று, புது விதமாக விளம்பரம் செய்து உள்ளது.

இந்த பாலியல் ரீதியான விளம்பரத்தை நம்பி, மஹாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணை தொடர்புக்கொண்டு உள்ளார்.

அப்போது, எதிர் முனையில் பேசிய நபர், “எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தால், ஒரு மணிநேரத்துக்கு 3 ஆயிரம் ரூபாய் சம்பவளம் கிடைக்கும் என்றும், வெளி நாடுகளுக்கும் செல்ல வாய்ப்புகள் உள்ளது” என்றும், ஆசை ஆசையான வார்த்தைகளை கூறியிருக்கிறார்.

அத்துடன், “எங்கள் நிறுவனத்தின் பணியில் சேர, சில லட்சங்களை முன் பணமாக நீங்கள் தர வேண்டும்” என்றும், அவர் புதிய ரூல்ஸ் போட்டிருக்கிறார். 

அதன்படியே, அவர்கள் கூறியதை கேட்டு மனம் தவறி மதி மயங்கிப்போன அந்த இளைஞர், இறந்து போன தனது தந்தையின் வங்கி சேமிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 17.26 லட்சம் ரூபாய் பணத்தை அந்த மர்ம நபர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்து உள்ளார். 

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுத்தப் பிறகு, ஒருகட்டத்துக்கு மேல் அந்த நபர்களின் செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் என்று வந்து உள்ளது.

இதனால், சந்தேகமடைந்த அந்த இளைஞன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நிலையில், அதன் பிறகு இது பற்றி தட்டாவாடி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், பணம் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கு எண்களை கொண்டு அந்த நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment