பிரதமரின் வீடு கட்டும் திட்டம்.. தொடர்ந்து லஞ்சம் கேட்டதால் மனமுடைந்து இளைஞர் தற்கொலை!

பிரதமரின் வீடு கட்டும் திட்டம்.. தொடர்ந்து லஞ்சம் கேட்டதால் மனமுடைந்து இளைஞர் தற்கொலை! - Daily news

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட லஞ்சம் கொடுத்ததால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள வேலங்குடி ஊராட்சிக்கு உட்பட்டது கமுதக்குடி. இந்த கிராமத்தை சேர்ந்த லெனின் என்பவர் மகன் மணிகண்டன் அவரது வயது 25 ஆகும். தனது குடும்பத்தினருடன் கூரை வீட்டில் வசித்து வந்த மணிகண்டன், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு விண்ணப்பித்து இருந்தார். 

இந்நிலையில் மணிகண்டனுக்கு  வீடு கட்டிக்கொள்ள அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு கட்டும் பணிகளை தொடங்கினார். அப்போது நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர், வீடு கட்டும் திட்ட பணிகளுக்காக ரூ.3 ஆயிரத்தை மணிகண்டனிடம் இருந்து லஞ்சமாக வாங்கி உள்ளார். வீட்டின் மேற்கூரை கான்கிரீட் போட்டவுடன் சிறிதளவு தொகை மணிகண்டனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொகையில் இருந்தும் ரூ.15 ஆயிரத்தை அதே வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. 

அதனைத்தொடர்ந்து மணிகண்டன் தான் வீடு கட்டுவதற்கு மேலும் பணம் தேவைப்பட்டதால் தான் வெளிநாடு செல்வதற்காக கடன் வாங்கி வைத்திருந்த பணத்தை கொண்டு மணிகண்டன் வீடு கட்டும் பணிகளுக்கு செலவு செய்துள்ளார். இதனிடையே திட்ட பணிகளுக்கான மேலும் தொகை சில நாட்களில் வந்து விடும் என மணிகண்டனிடம், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் தெரிவித்துள்ளார். மேலும்  அவர் கூறியபடி பணம் வரவில்லை. 

மேலும் பிரதமரின் வீடு கட்டும் திட்ட பணிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாலும், கடன் வாங்கியதாலும் மனமுடைந்த மணிகண்டன் நேற்று வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். விஷம் குடித்த மணிகண்டனுக்கு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி இளைஞர் மணிகண்டன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பேரளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுக்கு ஆளான, நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் தான் லஞ்சம் கொடுத்த விவரத்தை பேசி அதை மணிகண்டன் வீடியோவாக பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  

Leave a Comment