2 மகள்கள் இருந்தும் இளைஞனை ஏமாற்றி 2 வது திருமணம் செய்த பெண்! பணம் - நகைகளுடன் ஓட்டம்..

2 மகள்கள் இருந்தும் இளைஞனை ஏமாற்றி 2 வது திருமணம் செய்த பெண்! பணம் - நகைகளுடன் ஓட்டம்.. - Daily news

2 மகள்கள் இருந்த போதிலும், பெண் ஒருவர் இளைஞனை ஏமாற்றி 2 வது திருமணம் செய்துகொண்டு, பணம் மற்றும் நகைகளுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

“காலம் மாறிவிட்டது, கலிகாலமப்பா.. கலி முத்திடுத்து..” என்று, சில சம்பவங்களைப் பார்க்கும் போது தான் தோன்றும். அந்த வகையில், ஒரு காலத்தில், அப்பாவி பெண்களை அரக்க குணம் கொண்ட ஆண்கள் இப்படி திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிய சம்பவங்கள் நிறையவே, செய்திகளில் வந்ததுண்டு. ஆனால், இன்று காலம் அப்படியே தலை கீழா மாறி, அப்பாவி ஆண்களை சில கில்லாடி பெண்கள் ஏமாற்றும் அளவுக்கு காலம் மாறியிருப்பது என்பது ஒரு ஆரோக்கியமான விசயமல்ல என்றுதான் தோன்றுகிறது.

அதாவது, ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அடுத்து உள்ள கிராமத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர், கோவையில் பணியாற்றி வருகிறார். 

இவருக்கு திருமணம் செய்ய, அந்த பகுதியைச் சேர்ந்த தரகர்கள் மூலம் பெண் பார்க்கப்பட்டு வந்த நிலையில், இந்த விசயம், சில தரகர்கள் மூலமாக நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த தரகர் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கு தெரிய வந்தது. 

இதனையடுத்து, அந்த பெண் தரகர் ஏற்பாட்டில் பாளையங்கோட்டையை சேர்ந்த 35 வயது பெண்ணை, அந்த இளைஞருக்கு திருமணம் செய்து வைப்பதாக பேசி முடிவு செய்தனர்.

இதனையடுத்து, அந்த இளைஞர் தனது உறவினர்கள் புடைசூழ பாளையங்கோட்டை வந்து பெண்ணை பார்த்த நிலையில். அந்த பெண்ணையே கடந்த மாதம் ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள ஒரு கோயிலில் வைத்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்குப் பிறகு, அந்த மாப்பிள்ளை தனது புது மனைவி உடன் ஈரோட்டில் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.

இந்த நிலையில் தான், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து அந்த பெண், திடீரென்று மாயமாகி உள்ளார். 

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மாப்பிள்ளை தனது உறவினர்களுடன் சேர்ந்து தேடிய நிலையில், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 

அத்துடன், வீட்டில் இருந்த 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகைளையும் காணவில்லை என்பது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து, அந்த இளைஞரும் தனது உறவினர்கள் புடைசூழ அங்குள்ள பேருந்து நிலையத்திற்கு வந்த நிலையில், அந்த நேரத்தில் வீட்டை விட்டு மாயமான அந்த பெண்ணும், அந்த பெண் தரகரும் அதே பேருந்து நிலையத்திற்கு வெளியூர் செல்ல வந்த நிலையில், அங்கு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட அந்த இரு தரப்புக்கும் இடையே பெரும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து, அந்த புது மாப்பிள்ளை தரப்பினர், அந்த 2 பெண்களையும் பிடித்து அங்குள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்திருந்தது. போலீசார் நடத்திய இந்த விசாரணையில், “அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி, 2 மகள்கள் இருப்பது” தெரிய வந்தது.

அத்துடன், “அந்த பெண், முதல் கணவரை பிரிந்து விட்டதும் தெரிய வந்தது. தற்போது, தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து, அந்த இளைஞனை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டது” தெரிய வந்தது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment