பேருந்தில் பெண் வக்கீலிடம் பாலியல் சில்மிஷம்! குண்டூசியால் குத்திவிட்டு வீடியோ எடுத்த துணிச்சல் பெண்..

பேருந்தில் பெண் வக்கீலிடம் பாலியல் சில்மிஷம்! குண்டூசியால் குத்திவிட்டு வீடியோ எடுத்த துணிச்சல் பெண்.. - Daily news

ஓடும் பேருந்தில் பெண் வழக்கறிஞரிடம், பின் சீட்டில் அமர்ந்திருந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால், அவரை குண்டூசியால் குத்திவிட்டு அவரது சில்மிஷங்களை அந்த பெண் வீடியோ எடுத்துள்ள சம்பவம், வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன் தினம் இரவு, 28 வயது இளம் பெண்ணான வழக்கறிஞர் ஒருவர், தனது தாயாருடன் வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கத்திற்கு, அரசு பேருந்தில் பயணம் செய்து உள்ளார்.

அதன் படி, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து புறப்பட்ட அடுத்த சிறிது நேரத்தில், அந்த இளம் பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த 40 வயது நபர் ஒருவர், அந்த இளம் பெண்ணிடம் திடீரென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. 

இப்படியாக, அந்த நபர் அந்த பெண் வழக்கறிஞர் மீது கை வைத்து, தொடர்ச்சியாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால், கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த அந்த பெண், ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து மிகவும் ஆவேசம் அடைந்து, தான் வைத்திருந்த குண்டூசியை எடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த நபரின் கையில் பலமாக குத்தி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த நபரின் கை அதன் பிறகு தனது இருக்கைக்குள் நுழைவதையும், அதனை தான் குண்டூசியால் குத்துவதையும் அந்த பெண், தனது செல்போனில் வீடியோவாகவும் எடுத்து உள்ளார். 

அத்துடன், இது குறித்து அந்த பேருந்தின் டிரைவரிடம் அந்த பெண் புகார் அளித்த நிலையில், உடனடியாக இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் அந்த போன் மூலமாக புகார் அளித்து உள்ளார்.

இதனையடுத்து, வானகரம் அருகே அந்த பேருந்து சென்றுகொண்டிருந்த நிலையில், அந்த பேருந்தை, டிரைவர் நிறுத்தி உள்ளார். 

அந்த நேரத்தில், அங்கு வந்த கோயம்பேடு உதவி கமி‌ஷனர் தலைமையிலான போலீசார், பேருந்து நிறுத்தப்பட்டிருந்த வானரகம் பகுதிக்கு விரைந்துச் சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை அதிரடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர், பாதிக்கப்பட்ட அந்த பெண் வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த நபரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில், அந்த நபரின் பெயர் ராகவன் என்பதும், அவருக்கு தற்போது 40 வயது ஆவதும் தெரிய வந்தது.

மேலும், இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் என்பதும், விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து, “பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு” செய்த போலீசார், ராகவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தான், பாதிக்கப்பட்ட அந்த பெண் வழக்கறிஞர் தனது செல்போனில் எடுத்த குண்டூசியால் குத்தும் அந்த வீடியோவை தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ராகவனின் முகத்தையும், அந்த பெண் காட்சி படுத்தி உள்ளார். இதனால், அந்த பெண்ணின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தற்போது பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment