3 மாநில போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கில் லேடி! ஒரே பாணியில் நூதன திருட்டில் ஈடுபட்டதால் பரபரப்பு..

3 மாநில போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கில் லேடி! ஒரே பாணியில் நூதன திருட்டில் ஈடுபட்டதால் பரபரப்பு.. - Daily news

ஒரே பாணியில் தொடர்ந்து நூதன திருட்டில் ஈடுபட்டு 3 மாநில போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த கில் லேடியான பெண் ஒருவர், அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார்.

புதுச்சேரி சண்முகா புரத்தைச் சேர்ந்த 43 வயதான லட்சுமி என்ற பெண், புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் நிலையம் எதிரே பெண்களுக்கான அழகு நிலையம் மற்றும் தையலகம் வைத்து நடத்தி வந்திருக்கிறார். 

இப்படியான சூழலில் தான், கடந்த 9 ஆம் தேதி மதியம் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து, லட்சுமியிடம் “நான் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணி புரிவதாகவும், ஆதரவற்றோருக்கு கொடுப்பதற்கு அதிக அளவில் துணிகள் தைக்க வேண்டி உள்ளது என்றும், இதற்காக தனது தொண்டு நிறுவனத்தின் உரிமையாளர் வர உள்ளதாகவும்” கூறியிருக்கிறார்.

அத்துடன், “எங்கள் தொண்டு நிறுவனத்தின் உரிமையாளருக்கு அதிக அளவில் நகைகள் அணிந்து ஆடம்பரமாக இருப்பது பிடிக்காது” என்றும், அந்த பெண் கூறியிருக்கிறார். 

அந்த பெண் கூறியதை நம்பிய லட்சுமி, தன் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க ஜெயின், காதில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்ட தங்க நகைகளை கழற்றி, வரவேற்பறையில் உள்ள தனது மேஜை ட்ராயரில் வைத்து விட்டு, அந்த கடையின் உள்ளே சென்று வந்து உள்ளார்.

ஆனால், அதற்குள் அந்த 40 வயதான பெண், அந்த தங்க நகைகளுடன் மாயமாகி உள்ளார். இதனை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்த லட்சுமி, எதிரே உள்ள மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவை கூறி, புகார் அளித்து உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.

அப்போது, அந்த 40 வயதான பெண், கடைக்குள் செல்வது பதிவாகி இருந்ததை அடுத்து, கேமிராவில் பதிவான உருவத்தை கொண்டு “அந்த பெண் யார்?” என்பதை கண்டுப்பிடிப்பதில் போலீசார் தீவிரம் காட்டிய நிலையில், அவரை கண்டுப்பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதனையடுத்து, இந்த வடக்கு காவல் கண்காணிப்பாளர் பக்தவசலம் வடக்கு குற்ற பிரிவு போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அந்த போலீசார் இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்தினர். 

அப்போது, புதுச்சேரியில் நடந்து போலவே, இதே பாணியில் “கடந்த மாதம் மட்டும் கடலூர், திண்டிவனம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் ஒரு பெண் இப்படி நூதன முறையில் நகை திருட்டில் ஈடுபட்டது” தெரிய வந்தது.

இதனையடுத்து, எங்கெல்லாம் இப்படியான திருட்டு சம்பங்கள் நடைபெற்றதோ, அந்த பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்த போலீசார், அதன் அடிப்படையில் கிடைத்த தகவலின் படி, “அந்த பெண் ஆந்திரா மாநிலம் கடப்பாவை பூர்விகமாக கொண்ட பட்டாதாரி பெண் டெய்சி மார்ட்டின் என்பதும், அவருக்கு தற்போது 39 வயது” என்பதையும் கண்டுப்பிடித்தனர். 

மேலும், அந்த பெண், தற்போது சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வருவதை கண்டுப்பிடித்த போலீசார், 39 வயதான டெய்சியை  பள்ளிக்கரணையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து, அதிரடியாக கைது செய்தனர். 

இதனையடுத்து, அந்த பெண்ணை புதுச்சேரி அழைத்துச் சென்ற போலீசார், அங்கு வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், “அந்த பெண், கடப்பாவில் இருந்து சென்னை வந்து வசித்து வருவதாகவும், இதுபோல் பல இடங்களில் நூதன திருட்டில் ஒரே மாதிரியாக ஈடுப்பட்டு இருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

அதே பேலல், “கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆந்திராவில் மட்டும் 20 வழக்குகளும், தமிழகத்தில் 6 வழக்குகளும் இது வரை இந்த பெண் மீது நிலுவையில் இருப்பதும்” விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து, கில் லேடியான டெய்சியிடம் இருந்து புதுச்சேரியில் இருந்து திருடப்பட்ட 10 சவரன் தங்க நகைகளை, அடகு கடையில் இருந்து மீட்ட போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

குறிப்பாக, கில் லேடியான டெய்சியை திண்டிவனம், கடலூர், செங்கல்பட்டு போலீசார் புதுச்சேரி சிறையில் இருந்து விசாரணைக்காக காவலில் எடுத்து, அப்பகுதிகளில் திருடிய நகைகளை மீட்க திட்டமிட்டு உள்ளதாகவும், புதுச்சேரி போலீசார் முன்னதாக தகவல் தெரிவித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, ஒரே பாணியில் கில்லாடி பெண் ஒருவர் நூதன திருட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம், புதுச்சேரி பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment