எவரெஸ்ட் சிகரம் போல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

corono cases

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து  தமிழகத்தில் ஒமிக்ரானை  எதிர்கொள்ளத் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முககவசங்கள் போன்றவை அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இந்த முகாம்கள் முழு ஊரடங்கு காரணமாக சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதனைத்தொடர்ந்து  தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.  மாநிலம் முழுவதும் 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டதால் குடும்ப தொடர்பு பாதிப்புகள் அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது. எனவே முதியோர்கள் கட்டாயம் இந்த மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்தி பலன் பெற வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் இதனிடையே அடையாறு இந்திரா நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மெகா தடுப்பூசி முகாமினை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர் உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை எவரெஸ்ட் சிகரம் போல் உயர்ந்து கொண்டு இருக்கிறது. உலகளவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக நேற்று 26.06 லட்சம் பேருக்கு ஒரு நாள் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரவு நேர பொது முடக்கத்திற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் இல்லை. ஒவ்வொரு பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சரே தொடங்கி வைத்தார். 35 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த கண்டறியப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள தகுதியுடைய நபர்களுக்கு ஜனவரி 10 தேதி தடுப்பூசி செலுத்தப்படும். 

மேலும் 33 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியிருந்தது. அதில் 21 லட்சம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை முதல் டோஸ் 92 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 71 சதவீதம் பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  பொது இடங்களுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.