சாமாணியன் முதல் உச்ச நட்சத்திரங்கள் வரை, இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரவியிருக்கிறது கோவிட் 19 கொரோனா தொற்று. 

பாலிவுட்டில் அமிதாப் குடும்பம் கொரோனாவில் உறுதிசெய்யப்பட்டிருந்தது, சில தினங்களுக்கு முன் பலருக்கும் அதிர்ச்சியை தந்தது. பின்வந்த நாள்களில் அவர்கள் குணமாகியிருந்தனர். தமிழக நடிகர்களை பொறுத்தவரை, விஷால் - ஐஷ்வர்யா அர்ஜூன் போன்றோருக்கும் தொற்று உறுதியாகியிருந்தது. அவர்களும் அதிலிருந்து மீண்டுவந்து நம்பிக்கை தெரிவித்தனர். பாகுபலி திரைப்படத்தின் இயக்குநர் ராஜமௌலியும், சில தினங்களுக்கு முன் கோவிட் - 19 பாசிடிவ் என்று அறிவித்திருந்தார். அதற்கான சிகிச்சைகளை எடுத்து வரும் அவர், குணமானதும் பிளாஸ்மா தானம் செய்ய விரும்புவதாக விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சினிமா ஷுட்டிங் உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறாத நிலையிலும் பல நட்சத்திரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, இன்றைய தினம் பிரபல பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு, கோவிட் 19 கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சிகிச்சைகாக, சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் அவர். 

எஸ்.பி.பி, கடந்த மாதங்களில், தன்னுடைய அறக்கட்டளை சார்பாக கொரோனா பாதித்தவர்களுக்காக நிதி திரட்டி வருகிறார். ரூ.100 க்கு மேல் யார் வேண்டுமானாலும் நிதி தரலாம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, திரையுலகினர் பலருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

இதனையடுத்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ``அனைவருக்கும் வணக்கம், நான் பாலசுப்பிரமணியம் பேசுகிறேன். கடந்த இரண்டு மூன்று நாட்களாக எனக்கு லேசான அசௌகரியம் இருந்தது. சளி மற்றும் மூக்கடைப்பு மட்டும் இருந்தது. ஒரு பாடகருக்கு அது மிகவும் மோசமான ஒன்று .மேலும் விட்டுவிட்டு காய்ச்சலும் வந்து கொண்டிருந்தது. இது மட்டும் தான் இருந்தது, வேறு எந்த பிரச்சனையும் எனக்கு இல்லை. நான் எதையும் ஈசியாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் நானே மருத்துவமனை சென்று டெஸ்ட் எடுத்துக் கொண்டேன். டெஸ்ட் ரிசல்ட் வந்ததில் எனக்கு மிக மிக லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி பாசிட்டிவ் என வந்தது.

என்னை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுரை வழங்கினார்கள், மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் வீட்டிலேயே குணம் ஆகி விடுவீர்கள் என தெரிவித்தார்கள். ஆனால் நான் அதை செய்ய விரும்பவில்லை. வீட்டில் அனைவரும் இருக்கும் போது அவர்கள் என்னை தனிமையில் விட்டுவிட மாட்டார்கள், மிகவும் வருத்தப்படுவார்கள். அதனால் நான் மருத்துவமனையில் அட்மிட் ஆகி விட்டேன். என்னுடைய நண்பர்கள் இருக்கிறார்கள், என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள், என்னுடைய உடல்நிலை சீராகவே இருக்கிறது. அதை பற்றி யாரும் கவலை பட தேவையில்லை.

அதனால் தயவு செய்து எனக்கு ஃபோன் செய்து நலம் விசாரிக்க வேண்டாம். நான் மிகவும் நலமுடன் இருக்கிறேன். சளி மற்றும் ஜுரம் மட்டுமே இருக்கிறது.அதுவும் தற்போது குறைந்து விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் நான் வீட்டுக்கு டிஸ்சார்ஜ் ஆகி சென்று விடுவேன். உங்களது அக்கறைக்கும் நன்றி. பலர் எனக்கு ஃபோன் செய்து கேட்கிறார்கள், அனைத்து அழைப்புகளையும் என்னால் எடுத்து பேச முடியவில்லை. நான் இங்கு மருத்துவமனையில் இருப்பது ஓய்வு எடுக்கவும் சிகிச்சை எடுக்கவும் மட்டுமே. உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி. நான் நலமுடன் இருக்கிறேன், நலமுடன் திரும்புவேன்" என எஸ் பி பாலசுப்ரமணியம் குறிப்பிட்டிருக்கிறார்.