இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தென் மாநிலங்களில் கொரோனாவின் தீவிரம் சற்று குறைகிறது. இருப்பினும் சில வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தும் வருகிறது. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசியின் முக்கியத்துவம் முன்பைவிடவும் அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய ஏழு நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்து பார்ப்பது, 2 மற்றும் 3-வது கட்டங்களில் இருக்கிறது. இந்தநிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் 3 நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று சென்றார் 

முதல் கட்டமாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே சாங்கோதர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஜைடஸ் காடிலா நிறுவன ஆலைக்கு  இன்று காலை நேரில் சென்றார்.  அந்நிறுவனம் தயாரிக்கும் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசியின் 2-வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. அதன் முன்னேற்றம் குறித்து மோடி கேட்டறிந்ததோடு  தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிட்டார்.          

டெல்லியிலிருந்து இன்று காலை புறப்பட்ட பிரதமர் மோடி காலை 9.00 மக்கு அகமதாபாத் சென்றடைந்தார். அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள சாங்கோதர் தொழிற்பூங்காவில் இருக்கும் ஜைடல் கெடிலா நிறுவனத்துக்கு பிரதமர் மோடி சென்றார்.

ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, நிர்வாகிகள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருடன் கொரோனா தடுப்பு மருந்து தயாரி்க்கும் பணி, பரிசோதனை நிலவரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

பிபிஇ ஆடை அணிந்து, முகக்கவசம் அணிந்து நிறுவனத்துக்குள் சென்ற பிரதமர் மோடி, கொரோனோ தடுப்பு மருந்துப் பணிகளை நேரில் ஆய்வுசெய்தார். அப்போது பிரதமர் மோடியிடம் கொரோனா தடுப்பு பணிகள், பரிசோதனையின் கட்டம் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர். அவர்களிடம் பிரதமர் மோடியும் பல்வேறு சந்தேதகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கெடிலா நிறுவனத்தின் சார்பில் கொரோனா தடுப்பு மருந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. ஏறக்குறைய ஒரு மணிநேரம் கெடிலா நிறுவனத்தில் இருந்த பிரதமர் மோடி காலை 11.30 மணிக்கு அங்கிருந்து ஐதராபாத்துக்குப் புறப்பட்டார். 

அதன்பின் பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில் “ அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் கெடிலா பயோடெக் பார்க் நிறுவனத்துக்கு சென்றேன். அங்கு கொரோனா வைரஸுக்கு எதிராக உள்நாட்டிலேயே டிஏன்ஏ அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் தடுப்பு மருந்து குறித்த விவரங்களைக் கேட்டறிந்தேன்.

இந்த பணிக்கு பின்புலத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். இந்த மருந்து தயாரிக்கும் குழுவின் பயணத்துக்கு அரசு தேவையான உதவிகளை அளித்து துணையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக்கில் தயாரிக்கப்படும் உள்நாட்டு தடுப்பூசி குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இது குறித்து அவரது ட்விட்டரில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக்கில் தயாரிக்கப்படும் உள்நாட்டு தடுப்பூசி குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதுவரை சோதனைகளில் வெற்றிகண்ட விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். விரைவான முன்னேற்றத்தை எளிதாக்க அவர்களின் குழு இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சிலுடன் நெருக்கமாக செயல்படுகிறார்கள்" என கூறி உள்ளார்.

இப்போதைக்கு உலகளாவிய தடுப்பூசி பணிகளில், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக தடுப்பூசி தான் முன்னிலையில் இருக்கிறது. தடுப்பூசிகளை பொறுத்தவரை, அவரை ஃபைசர் மற்றும் மாடெர்னா நிறுவன வகை தடுப்பு மருந்துகள் மிகக் குளிரான வெப்பநிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்ற நிலை இருந்தது. அவ்வாறு பராமரிப்பது கடினம் என்பதால் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஸெனெகா நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்த தடுப்பூசி நம்பிக்கைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்பட்டது. ஆனால், பரிசோதனையில் இரண்டு டோஸ்கள் பெற்ற தன்னார்வலர்களைக் காட்டிலும், ஒரு டோஸ் மட்டுமே பெற்றவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாக முடிவுகள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் முதலில் இருந்து நடத்த உள்ளதாக அஸ்ட்ரா ஸெனெகா அறிவித்துள்ளது.

முன்னதாக, இந்த தடுப்பூசியின் உற்பத்திக்கு ஆஸ்திரேலியாவின் சிஎஸ்எல் நிறுவனம், ஆஸ்ட்ரா ஸெனகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று சிஎஸ்எல் நிறுவனம் தெரிவித்திருந்தது. இது உலகின் நம்பகமான தடுப்பூசிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இப்படியொரு செய்தி வெளியாகியிருப்பது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.