உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி தடுப்பூசி ஆய்வில் முன்னனியில் இருப்பதாக சொல்லப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ரா ஜெனெகா கண்டுபிடித்துள்ள தடுப்பூசியான கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான ஆய்வு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைகள், இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் கையாளப்படுகின்றன. இதற்கான காரணமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட தன்னர்வலருக்கு நரம்பியல் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதை கூறினர். பின், அவர் குணமடைந்து வருவதாகவும் விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டது. அதோடு தடுப்பூசி சோதனை அடுத்த வாரத்திற்குள் மீண்டும் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த மூன்றாம் கட்ட சோதனைகள் இந்தியாவில் 19 க்கும் மேற்பட்ட மையங்களில் நடந்தது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக மகாராஷ்டிராவின் புனே மற்றும் மும்பையிலும், குஜராத்தின் அகமதாபாத்திலும் இந்த முக்கியமான கட்டத்தின் கீழ், 1,600 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என கூறப்பட்டது. 

இந்நிலையில் ஆக்ஸ்போா்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனமும் இணைந்து உருவாக்கி, ஆய்வு நிலையில் இருக்கும் அந்த கொரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியுள்ளதாக இந்தியாவின் சீரம் நிறுவனம் வியாழக்கிழமை (நேற்று) அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையரின் நோட்டீஸைத் தொடா்ந்து இந்த அறிவிப்பை சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தடுப்பூசியை மனிதா்களுக்கு செலுத்தி பரிசோதனைகள் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அந்த மருந்து செலுத்தப்பட்ட தன்னாா்வலா் ஒருவருக்கு கடந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடா்ந்து இந்த மருந்தின் பரிசோதனை நிறுத்திவைப்பட்டதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அப்போதே அறிவித்தது.

ஆனால், இந்தியாவில் அந்த தடுப்பூசி பரிசோதனை மற்றும் உற்பத்திக்கு ஒப்பந்தம் செய்துள்ள சீரம் நிறுவனம், ‘இந்தியாவில் இதுவரை எந்தப் பிரச்னையும் எதிா்கொள்ளப்படவில்லை என்பதால், அந்த தடுப்பு மருந்தின் பரிசோதனை தொடரும்’ என்று தெரிவித்தது. இந்த அறிவிப்புதான், சா்ச்சைக்கு காரணமாக அமைந்தது.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையா் வி.ஜி.சோமானி, ‘நோயாளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை அஸ்ட்ராஜெனிகாவின் தடுப்பூசி பரிசோதனையை ஏன் நிறுத்தி வைக்கக் கூடாது’ என்று கேள்வி எழுப்பி சீரம் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினாா். இந்த நோட்டீஸைத் தொடா்ந்து, இந்தியாவின் சீரம் நிறுவனமும் அந்த தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: `நாங்கள் நிலமையை மறு ஆய்வு செய்து வருகிறோம். எனவே, அஸ்ட்ராஜெனிகா பரிசோதனையை மீண்டும் தொடங்கும் வரை, இந்தியாவிலும் அதன் பரிசோதனையை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். டிசிஜிஐ-யின் அறிவுறுத்தல்களையும் சீரம் முறையாக பின்பற்றும்'