கொரோனாவிலிருந்து இந்தியா முழுவதுமாக விடுபட, தடுப்பூசி கண்டறியப்பட வேண்டும் என்பது மருத்துவத்துவர்கள் சொல்லும் விஷயமாக இருக்கிறது. இருப்பினும் தடுப்பூசிகள் கண்டறியும் பணி மிகவும் மெதுவாகவே நடந்து வருகிறது.

ரஷ்யா தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக கூறிவிட்ட போதும், அது பாதுகாப்பானதாக அறியப்படாமல் இருக்கிறது. இவையாவும் ஒருபுறமிருக்க, உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி தடுப்பூசி ஆய்வில் முன்னனியில் இருப்பதாக சொல்லப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ரா ஜெனெகா கண்டுபிடித்துள்ள தடுப்பூசியான கோவிஷீல்ட், இன்னும் 73 நாட்களில் சந்தையில் கிடைக்கும் என்று பிசினஸ் டுடே வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைகள், இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் கையாளப்படுகின்றன.

ஆதாரங்களை மேற்கோள் காட்டி, நிறுவனம் “உரிமைகள் வாங்குவதற்கும், இந்தியா மற்றும் பிற 92 நாடுகளில் பிரத்தியேகமாக விற்பனை செய்வதற்கு ராயல்டி கட்டணம் செலுத்துவதற்கும் அஸ்ட்ரா ஜெனெகாவுடன் பிரத்யேக ஒப்பந்தத்தை செய்துள்ளது” என்று கூறியுள்ளது.

மூன்றாம் கட்ட சோதனைகள் நேற்று இந்தியாவின் 20 மையங்களில் தொடங்கியது. முக்கியமாக மகாராஷ்டிராவின் புனே மற்றும் மும்பையிலும், குஜராத்தின் அகமதாபாத்திலும் இந்த முக்கியமான கட்டத்தின் கீழ், 1,600 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளை நேரடியாக வாங்குவதாக மத்திய அரசு ஏற்கனவே சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்தியர்களுக்கு இலவசமாக நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்க திட்டமிட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சீரம் நிறுவனத்திடமிருந்து 130 கோடி இந்திய குடிமக்களுக்கு 68 கோடி டோஸை அரசாங்கம் கோரியுள்ளது. “அரசாங்கம் எங்களுக்கு சிறப்பு உற்பத்தி முன்னுரிமை உரிமத்தை வழங்கியுள்ளது மற்றும் சோதனைகளைப் பெறுவதற்கான சோதனை நெறிமுறை செயல்முறைகளை விரைவாகக் கண்டறிந்துள்ளது. இது 58 நாட்களில் நிறைவடைந்தது.

இதன் மூலம், மூன்றாம் கட்டத்தின் முதல் டோசிங் இன்று முதல் நடக்கிறது. இரண்டாவது டோஸ் 29 நாட்களுக்குப் பிறகு போடப்படும். இறுதி சோதனை தரவு இரண்டாவது டோஸ் போடப்பட்டு 15 நாட்களில் வெளியிடப்படும். எந்த நேரத்திலும், கோவிஷீல்ட்டை வணிகமயமாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.” என்று ஒரு சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உயர் அதிகாரி நேற்று பிசினஸ் டுடேவிடம் தெரிவித்தார்.

கோவிஷீல்ட் தவிர, ஐ.சி.எம்.ஆர்-பாரத் பயோடெக்கின் ‘கோவாக்சின்’ மற்றும் ஜைடஸ் காடிலாவின் ‘ஜைகோவ்-டி’ ஆகியவையும் இந்த தடுப்பூசி பந்தயத்தில் உள்ளன. இந்த இரு தடுப்பூசிகளும் ஒரே நேரத்தில் கட்டம் I மற்றும் II’இல் மனித மருத்துவ பரிசோதனைகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தடுப்பூசி மேம்பாடு தொடர்பான அனைத்து தகவல்களும் அடங்கிய  களஞ்சியமாக ஒரு இணைய முகப்பை உருவாக்க  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஈடுபட்டு வருகிறது. முதற் கட்டமாக இதில் கொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல் இடம் பெறும் என்றும், பின்னர் படிப்படியாக,  பல்வேறு நோய்களைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகள் தொடர்பான தகவல்களுடன் இந்த இணைய முகப்பு  மேம்படுத்தப்படும் என ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தடுப்பு தொடர்பான 2 தடுப்பூசி கண்டுபிடிப்பு பல்வேறு கட்டங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஸ்ஃபொர்டு கண்டறிந்து வரும் தடுப்பூசிக்கு முன்னரேவும், இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி 'கோவாக்சின்' 2020 இறுதிக்குள் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.