இந்தியாவில் இன்று ஒரேநாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corono cases

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. 

இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து  நேற்று முன் தின பாதிப்பான 37 ஆயிரத்து 379 மற்றும் நேற்றைய பாதிப்பான 58 ஆயிரத்து 97-ஐ விட மிக அதிகம் ஆகும். மேலும் இதனால் நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 51 லட்சத்து 9 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 19 ஆயிரத்து 206 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 41 ஆயிரத்து 9 ஆக அதிகரித்துள்ளது.  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 401 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 82 ஆயிரத்து 876 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 148.67 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.