நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77 லட்சத்தை கடந்திருந்தாலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருகின்றது. மற்றொரு பக்கம், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அந்த வகையில், குணமடைவோர் விகிதம், 89.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. வரும் பிப்ரவரி 2021 க்குள் வைரஸ் தொற்று முழுவதும் கட்டுக்குள் வரும் என்று மருத்துவர் நிபுணர் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ``கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்துவருகின்றன. தடுப்பூசி தயாரானவுடன் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை மத்திய அரசு உறுதி செய்யும்" என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். 

வரப்போகும் தடுப்பூசி, எந்த விலைக்கு விற்கப்படும் என்பது மட்டும் இப்போதைக்கு கேள்விக்குறியாக இருக்கின்றது. பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருவதால், அங்கு பாஜக வெற்றி பெற்றால் தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படும் என கூறப்பட்டது சர்ச்சையானது. தமிழகத்திலும் கூட, முதல்வர் பழனிச்சாமி இங்கு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக தரப்படும் என நேற்று கூறியிருந்தார்.

தடுப்பூசி தயாரிக்கப்படுவதற்கு முன்பாகவே, அதை இலவசமாக தருவதற்கு அனைவரும் பேசிக் கொண்டிருப்பது, மருத்துவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது. 

இலவசங்களுக்கு முன்பு, தடுப்பூசியை கண்டறியும் பணியிலும், அதை தேவையான அளவு உற்பத்தி செய்வதிலும் அரசு ஆர்வம் காட்ட வேண்டுமென மருத்துவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, தடுப்பூசியை கண்டறிவதற்கு, ஆய்வாளர்கள் முனைப்புக் காட்டி வருகின்றனர். அதேபோல, உற்பத்தியில் அரசு தீவிரம் காட்டி வருகின்றது. உற்பத்தியில் அரசு காட்டும் முனைப்பில் ஒன்றாக, தடுப்பூசி உற்பத்திக்கென சிறப்பு நிதி நேற்று ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய அரசின் உயரதிகாரிகள் நேற்று கூறியதாவது:

``தடுப்பூசிக்கு மத்திய அரசு 700 கோடி டாலர் (சுமார் ரூ.51 ஆயிரம் கோடி) ஒதுக்கியுள்ளது. இத்தொகை வரும் மார்ச் 31-ம் தேதியுடன் முடியும் நடப்பு நிதியாண்டிலேயே ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகைக்கு பிறகும் ஏற்படும் கூடுதல் செலவுக்கு நிதி ஒதுக்குவதில் அரசுக்கு எவ்வித பிரச்சினையும் இருக்காது. 130 கோடி மக்களுக்கும் தடுப்பூசி அளிப்பது உறுதி செய்யப்படும்.

கொரோனா தடுப்பூசிக்காக ஒரு நபருக்கு அனைத்து செலவும் சேர்த்து 6 முதல் 7 டாலர் வரை (சுமார் ரூ.450 முதல் ரூ.550 வரை) செலவிட வேண்டியிருக்கும் என மத்திய அரசு கணக்கிட்டுள்ளது. முதல் டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் என ஒருவருக்கு 2 முறைதடுப்பூசி போடப்படும். இதன்படி தடுப்பூசிக்கான செலவு மட்டும் ஒரு நபருக்கு 2 டாலர் (ரூ.150)செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர அதனை இருப்பு வைத்தல், போக்குவரத்து, கட்டமைப்பு மற்றும் பிற தேவைகளுக்காக ஒரு நபருக்கு 4 முதல் 5 டாலர் வரை செலவிட வேண்டியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது"

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

உற்பத்தி மட்டுமன்றி, கொரோனா வைரஸ் தடுப்பூசி நாடு முழுவதும் விரைவாக வழங்கப்படுவதை உறுதி செய்ய, அதனை இருப்பு வைப்பதற்கு தேவையான குளிர்பதன வசதி எங்கெங்கு உள்ளது என்பதை கண்டறியும் விரிவான பணியை மத்திய அரசு அண்மையில் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக மருந்து உற்பத்தி, உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் துறை தொடர்பான அரசு, தனியார் நிறுவனங்களுடன் நிபுணர் குழுவினர் பேசி வருகின்றனர். தாலுகா அளவில் மருந்தை இருப்பு வைக்கவும், விநியோகிக்கவும் குளிர்பதன வசதிகளை கண்டறிய ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களுடனும் அதிகாரிகள் பேசி வருகின்றனர்.

அதேவேளையில் கொரோனா தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ள சுமார் 30 கோடி பேரை அடையாளம் காணும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முன்னுரிமை பயனாளிகளான இந்த 30 கோடி பேரில் கொரோனா முன்களப் பணியாளர்களான மருத்துவ ஊழியர்கள், துப்புரவு ஊழியர்கள் மற்றும் காவல் துறையினரும் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது. முதல் டோஸ், பிறகு பூஸ்டர் டோஸ் என இவர்களுக்கு 60 கோடி டோஸ்கள் வழங்கப்பட உள்ளன. தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் இப்பணி உடனடியாகத் தொடங்க உள்ளது.

இந்தியாவில் 3 தடுப்பூசிகள் தற்போது மனித சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைத்து உருவாக்கிய தடுப்பூசி, இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது. இதற்கான பரிசோதனையை இந்தியாவில் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் மேற்கொண்டு, ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தடுப்பூசியை தயாரிக்க உரிமம் பெற்றுள்ளது. இரண்டு கட்டப் பரிசோதனைகளை அந்த நிறுவனம் ஏற்கெனவே முடித்துவிட்டது.

இந்நிலையில் புனேவில் உள்ள சசூன் அரசு பொது மருத்துவமனையில் 3-ம் கட்ட பரிசோதனையை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் 3-ம் கட்ட பரிசோதனை விவரங்கள் தெரியவரும் என மத்திய அரசு அண்மையில் தெரிவித்துள்ளது.