கொரோனாவைத் தடுக்கும் பணியில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரும் தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில், அமமுக பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா பாதிப்பு சில தினங்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்டது. கொரோனோ தொற்றின் காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதன் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. வெற்றிவேல் ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பதால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளனர்.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம், வெற்றிவேலின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று தெரிவித்தனர். வெற்றிவேலின் உடல்நலம் குறித்த மருத்துவமனை தரப்பு தகவல், அக்கட்சி தொண்டர்கள் முதல் டிடிவி தினகரன் வரை பலரையும் சோகத்தில் தள்ளியது.

கொரோனா உறுதி செய்வதற்கு முன்பு வரையில், கட்சியில் ஆக்டிவ்வாகவே அவர் இருந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் கூட, கட்சிப் பணிக்காக சென்னையில் அமமுக மாவட்ட நிர்வாகிகளுடன் பொருளாளர் வெற்றிவேல் ஆலோசனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார். அமுமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ள செய்தியில், ``வெற்றிவேல் மறைவு அமமுகவுக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவர் மறைவுக்கு ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும். அமமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அதேபோல் ஒரு வாரம் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.

அதேபோல் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் தரப்பில், ``அ.ம.மு.க. பொருளாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வெற்றிவேல் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் காலமானார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவிற்கு தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவரது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ``அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் ஆர்.வெற்றிவேல் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், அ.ம.மு.க.-விற்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.