தமிழகம் உட்பட 19 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மீண்டும் ஒரு ஊராடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராதாகிருஷ்ணன், “அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமா இருக்கிறது. தற்போது தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை ஒழிக்க பொதுமக்கள்  ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 


சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நோய் பரவல் அதிகமாக உள்ளது. சென்னையில் தேனாம்பேட்டை, அண்ணா நகர், அடையார், அம்பத்தூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நோய்த்தொற்று அதிகமாக பரவி வருகிறது.


திருமணங்கள், கோவில் திருவிழாக்கள், இறப்பு நிகழ்வுகள், போன்ற நிகழ்ச்சிகளில் பொது மக்கள் தடுப்பு நடவடிக்கையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக தற்போது அரசியல் நிகழ்வுகள் அதிகமாக நடைபெற்று வருவதால் நோய் அதிகப்படியாக பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. பொது இடங்களில் முகக் கவசங்கள் அணிவதை பொதுமக்கள் கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டும். 
தமிழகத்தை பொறுத்த வரை இதுவரை 16 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். பொதுமக்கள் கட்டாயமாக நோய்க்கான தடுப்பூசியை செலுத்துக்கொள்ள வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கவனிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளோம். பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஊரடங்கு என்னும் வதந்திகளை நம்ப வேண்டாம் . இருந்தாலும், தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் ஏறுமுகமாக உள்ளது இதனை மக்கள் அறிந்து விழிப்புடன் செயல்பட வேண்டும். ” என்று தெரிவித்தார்.