தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும், கடந்த சில வாரங்களாக தினமும் சராசரியாக 5900 பேர் கொரோனாவால் காரணமாக பாதிக்கப்படுகிறார்கள். இப்படியான சூழலில், நேற்று முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தொடங்கியது. சிறப்பு ரயில் சேவைகளும் தொடங்கின. இதனால் மாவட்டங்களுக்கு இடையிலான இ-பாஸ் நடைமுறையும் முழுமையாகரத்து செய்யப்பட்டுள்ளது. இவையாவும், தமிழகத்தை இயல்பு நிலைக்கு திருப்பிவிட்டது.

இருப்பினும் ஊரடங்கு தளர்வுகள் யாவும், கொரோனா எண்ணிக்கையில் உயர்வை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் சிலர் கணிப்பு கூறினர். விளைவுகள் முழுமையாக தெரிய, ஒன்றிரண்டு வாரங்கள் ஆகலாம் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் கூடுதல் தளர்வுகள் கொண்டு வருவது பற்றி ஆலோசனை நடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஏனெனில், பொதுவாக தமிழக முதல்வர் மருத்துவர் குழுவோடு ஆலோசித்தால், லாக்டவுன் தளர்வுகள் குறித்த ஏதேனும் ஒரு அறிவிப்பு வரும். 

இப்படி எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த இந்த ஆலோசனையின் முடிவில், முதல்வர் பத்திரிகையாளர்களை சந்தித்து விடையளித்தார். அப்போது பேசிய அவர்,

``கொரோனா படிப்படியாக குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் ஆகியோர் மினி கிளினிக்கில் இடம் பெறுவர். ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத பகுதிகளில் மினி கிளினிக் அமைக்கப்படும். 

40% மக்கள் மாஸ்க் அணிவது இல்லை; மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஞாயிறுதோறும் இறைச்சி வாங்க குவியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் குவிவதை காவல்துறையினர் தடுக்க வேண்டும். டெங்கு கொசுவைத் தடுக்க தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  அனைத்து நிறுவனங்களும் 100 சதவீதம் திறக்கப்பட்டுள்ளது. 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருப்பவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது ஆகிய வழிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் தொற்று பரவல் அதிகரித்துவிடும். ஊரடங்கு தளர்வை பொதுமக்கள் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் கொரோனா பரவாமல் தடுக்க ஒத்துழைப்பு கொடுப்பது அவசியம்" 

என்று பேசினார்.